பக்கம்:அஞ்சலி.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

74 லா. ச. ராமாமிருதம்

“ஆமாம், நீ என் வாழ்க்கையுள் வந்தது எனக்கு மறந்துவிடுமா?” திடீரென மெதுவிட்ட அவன் கண்களில் பனி ஈரம் பளபளத்தது. அவள் கன்னத்தை விரல் நுனிகளால் தொட்டான். “மாதத்திற்கொரு முறை, பிறகு வருடத்திற்கு ஒரு தினம், லக்ஷ்மி இறந்த தினம், அம்மா ஒரு கன்னிப் பெண்ணுக்குச் சாதமிட்டு வந்தாள்.”

“அவர்களில் ஒருத்தியாய், நான் வந்தேனே பழமையின் நினைவின் அகிற் புகை புகுந்து படருகையில், அந்த இன்பப் போதையில், அவள் வார்த்தைகள் சற்று மழலையாய்க் குழறின. “நான் சாப்பிட்டப்பறம், உங்கள் அம்மா என்னை மணையில் ஒக்காரவெச்சு என் காலுக்குப் பச்சையிட்டு, கைக்கு வளையலிட்டு, கூந்தலைக் கோதி முடிஞ்சு அதில் ஒரு பூவையும் சொருகின சமயத்தில் அப்போத்தான் நீங்கள் இதோ இதே குத்துவிளக்கின் பாதத்தில் ரெண்டு கையினாலும், பூவைச் சொரிந்து தலை நிமிர்ந்தீர்கள். அப்போ உங்கள் பார்வை என்மேல் சாஞ்ச போது, என் நெஞ்சிலே நெருப்பை வெச்சாப்போல இருந்தது, அப்பா! இப்பொ நினைச்சாக்கூட உடல் சிலிர்க்கிறது...!”

அவன் நாட்டம் விளக்கின்மேல் நிலைத்திருந்தது. அதன் சுடரிலிருந்து அவனுக்கு மட்டும் தெரிந்து பொறி விட்டு புறப்படும் எழுத்துக்களை வாய்விட்டுக் குரல் நக நகக்கப் படித்துக்கொண்டிருந்தான்

“கன்னிப் பெண்ணாய் முதன் முதலாய் இந்த விளக்கின் சாட்சியாக இந்த வீட்டுள் கால் வைத்தாய். பிறகு இதன் சாட்சியாய் என் வாழ்க்கையுள் நுழைந்து இங்கேயே தங்கிப் போனாய். இவ்விளக்கெதிரில்தான் மீனாவையும் நீனாவையும் வளர விட்டாய். இதைத்தான் அவர்கள் முதன் முதலாய்ப் பார்த்தார்கள். இதுதான் அவர்களை வளர்த்து வருகிறது.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/84&oldid=1033424" இலிருந்து மீள்விக்கப்பட்டது