பக்கம்:அஞ்சலி.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஜமதக்னி 75

“பாச்சு?” பழைய துக்கத்தின் புதிய வேகத்தில் மாஞ்சி உதட்டை இரத்தம் வரக் கடித்துக்கொண்டாள். கன்னங்களில் கண்ணிர் புலு புலுத்தது.

“பாச்சு?—” அவன் மோவாய் அவன் கையில் ஊன்றியது. “ஆம்; அவனும் இவ்விளக்கில் சேர்ந்தவன் தான். சுடரிலிருந்து ஒரு பொறி. இப்பொழுது தன்னில் ஒரு பொறி பெரிதாகிக்கொண்டு வருகிறது—பார்!!—”

அவன் கண்கள் ஜ்வலித்தன.அவன் சுட்டிக் காண்பித்துக்கொண்டிருக்கையிலேயே விளக்கிலிருந்து ஒரு சிறு சிநருப்புப் பந்து குதித்துக் கீழேயிறங்கிற்று. அந்தத் திரி கீழே விழுந்து எரிவதை மாஞ்சி பார்க்கையில், அவளையுமறியாது அவள் கை அவன் முழங்கையைத் தொட்டது. அவளுள் திடீரென்று ஏதோ பற்றிக் கொண்டாற். போலிருந்தது.

***

“விளக்கண்டை உட்கார்ந்திருப்பதைத் தவிர வேறு வேலையில்லையா உங்களுக்கு? உங்கள் பிள்ளை தொட்டிலில் கொக்கரிக்கிறான் பாருங்களேன் பாருங்கோ —அச்சு கண்ணாட்டி!”

மாஞ்சிக்கு சந்தோஷம் தாங்கமுடியவில்லை. குழந்தையின் விளையாட்டைக் கண்டு, அவள் குழந்தை மாதிரி கைகொட்டி நகைக்கிறாள். ஜமதக்னி முகம் திரும்பினான். மாஞ்சி இந்தத் தடவை ரொம்பவும் வாங்கிப் போய்விட்டாள். இந்தப் பிரசவம் ஏனோ தெரியவில்லை. ரோம்பவும் சிரமப்படுத்திவிட்டது. குழந்தை பிறந்து ஆறு மாதங்களாகிவிட்டன. அவள் இன்னமும் சரியாய்த் தேறினபாடில்லை. அவளை அப்படிக் காண்கையில், அவனறியாததோர் தாய்மை அவனுள் அலைமோதி எழும்பிற்று. அவளை ஏன் இப்போது ஆணின் கண்களுடன் பார்க்க முடியவில்லை?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/85&oldid=1033425" இலிருந்து மீள்விக்கப்பட்டது