“கவலை துறந்திங்கு வாழ்வதே வீடென்று காட்டும் மறைகளெல்லாம்” என்று பாரதியார் பாடுகிறார். உலக வாழ்க்கையிலே எத்தனையோ விதமான கவலைகள் மனிதனை வாட்டுகின்றன. அவை யெல்லாம் தாக்காதவாறு வாழக் கற்றுக் கொண்டவன் உண்மையான இன்பத்தைப் பெறுவான் என்பதில் ஐயமில்லை.
கவலையை நன்கு ஆராய்ந்து பார்த்தால் அதற்கு அடிப்படையாக இருப்பது பயம் என்று காணலாம்.
பயத்திற்கு அடிப்படை என்னவென்று ஆராய்வது சுவையான காரியம். பிறந்த குழந்தைக்கு மேலேயிருந்து கீழே திடீரென விழுவது போன்ற நிகழ்ச்சியிலே பயமுண்டாம். அந்த பயம் பிறவியிலேயே வந்திருக்கிறது என்று கூறுவார்கள். மரக் கிளைகளிலே இரவு நேரத்தைக் கழித்த ஆதி மனிதர்கள் தூக்க நிலையிலே தவறிக் கீழே விழுந்திருக்கலாம். இப்படிப் பல தடவைகளிலே பல பேர் விழுந்து விழுந்து துன்பப்பட்டதால் ஏற்பட்ட பயம் அப்படியே தலைமுறை தலைமுறையாக வந்திருக்கிறதாம். அதனால் தான் உயரத்திலிருந்து கீழே விழுவது போல் வேகமாக வருவதிலே குழந்தை பயமடைகிறது. இதே போலக் குழந்தை பெரிய சப்தத்தைக் கேட்டும் பயமடைகிறது. இடி முழக்கம் கேட்ட குழந்தை வீரிட்டு அழுகிறது. இந்த பயமும் ஆதி காலத்திலிருந்து வருகின்றதாம். இவை தவிர வேறு வகையான பயங்களெல்லாம். பின்னால் ஏற்படுகின்றன வென்றும், நல்ல முறையிலே