நூல்முகம்
இடையின்றி அணுக்களெலாம் சுழலுமென
இயல்நூலார் இசைத்தல் கேட்டோம் ;
இடையின்றிக் கதிர்களெலாம் சுழலுமென
வானூலார் இயம்பு கின்றார் ;
இடையின்றித் தொழில்புரிதல் உலகினிடைப்
பொருட்கெல்லாம் இயற்கை யாயின்,
இடையின்றிக் கலைமகளே ! நினதருளில்
எனதுள்ளம் இயங்கொ ணாதோ ?
-பாரதியார்
‘மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது’ என்ற பழமொழியை அறியாதவர்கள் இல்லை. இந்தப் பழமொழி அணுவிற்கு முற்றிலும் பொருந்தும். கடந்த இரண்டாம் உலகப் பெரும் போருக்குப் பிறகு ‘அணு’ என்ற சொல்லை உச்சரிக்காதவர்களே இல்லை. கல்வியறிவு சிறிதும் இல்லாது குக்கிராமங்களில் வாழும் பாமரர்களும் அணுகுண்டின் திருவிளையாடல்களைப்பற்றிப் பேசுகின்றனர். சிறுவர் பத்திரிகைகளும் அணுகுண்டினைப் பற்றி முழங்குகின்றன. மேலை நாட்டிலும் கீழை நாட்டிலும் அணுவின் அடிப்படையில் சில சமயங்களே எழுந்துள்ளன. சமண மதம் பேசுவதும் அணுக் கொள்கையைத்தான். மணிமேகலை என்ற நூலில்,