பக்கம்:அண்ணாவின் சொல்லாரம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

25

அற்புதம் நடத்தினார், மறைந்தார் என்ற முறையிலே எண்ணிக் கொள்கிற வரையில், இந்த நிலை மாறாது.

காந்தி அடிகள் மறையவில்லை. நம்முன் இருக்கிறார். நம்முடன் கலந்து விட்டார் என்று எண்ணுதல் வேண்டும் அவருடைய எண்ணங்கள் மடிந்திடவில்லை ; அவைகளை நம்முடைய இலட்சியமாகக் கொண்டுள்ளோம் என்ற உறுதி பிறந்திட வேண்டும்.

மாண்பு பிறந்திடப்
பணிபுரிவோம்

மறைந்த காந்தி அடிகளின் பிறந்தநாளைக் கொண்டாடுவதன் பொருள் இதுவாகவே இருக்க வேண்டும். அவர் இறவாப் புகழ் பெற்றார் என்பதனை எடுத்துரைக்கும் நாள்மட்டுமல்ல இது. அவருடைய எண்ணங்களை ஏற்றுக் கொண்டவர்கள் நாங்கள் ; எனவே அவர் காண விரும்பிய மாண்பு பிறந்திடப் பணிபுரிவோம் என்ற உறுதிபெற !

அவருடைய நாட்களில் அவர் குரல் கேட்டு அன்னிய அரசு வெருண்டோடிற்று ; ஆனால் ஓட்டப்பட வேண்டியவை பல இருக்கின்றன.

பொய்மையும், கயமையும், கல்லாமையும் இல்லாமையும் சாதிப்பித்தமும் வகுப்பு மாச்சரியமும்

வெருண்டோட வேண்டும். அதற்குத் தேவைப்படும்,

தூய்மையும் வாய்மையும் அஞ்சாமையும் பணியாற்றும் தன்மையும்,

நம் ஒவ்வொருவருக்கும் இன்று பிறந்திட வேண்டும். அதற்கே இன்று காந்தி அடிகளின் பிறந்த நாளைக் கொண்டாடுகிறோம்.