பக்கம்:அண்ணாவின் சொல்லாரம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

45


மாநில அரசு கம்பவுண்டர்;
மத்திய அரசு டாக்டர்

மாநில அரசு நோய் தீர்க்கும் டாக்டரின் நிலையில் அல்லாமல் கம்பவுண்டரின் நிலையிலேயே உள்ளது. மத்திய சர்க்காரோ முதல் வகுப்பு டாக்டரின் நிலையில் உள்ளது.

மாநில அரசோ மத்திய அரசோ அல்லது தனியார் துறையினரோ யாராகயிருப்பினும் பொருளாதாரச் சீர்கேடு ஏற்படாது தவிர்த்திட ஏதாகிலும் செய்தாக வேண்டுமென்று உணர்ந்துள்ளனர். இந்த உணர்வு மிக முக்கியம். இந்த உணர்வு ஏற்பட்டுள்ளது கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்.

நோய்க்குக் கூறப்படுகிற மருந்துகளும், சிகிச்சை முறைகளும் மாறலாம் ஆனால் சிகிச்சை அளிக்கவேண்டுமென்ற உணர்வு ஏற்படுவதே முக்கியம்.

புதிய கட்சி இம்மாநிலத்தில் ஆட்சிக்கு வந்தது பற்றிச் சொல்லப்பட்டது. இந்த வசீகரமெல்லாம் சில மாதங்கள்தான். நாளடைவில் இந்த வசீகரம், குறைந்து விடும், வரலாற்றின் நாளேட்டில் நெடுங்காலத்திற்குப் பிறகு இது மங்கியதொரு தாளாகிடும்.

புதிய கட்சி என்பதால் எவரும் எவ்வித அச்சமும் அடையத் தேவையில்லை.

இந்த அரசும் இதை நடத்திச் செல்கிற திராவிடமுன்னேற்றக் கழகமும் தனது மக்கள் நலப்பணியில் மக்களது ஆதரவினை நாடுகின்றன. மக்களுக்கு மூன்றுவேளை சோறாவது அவர்கள் திருப்தியடையும் வகையில் அவர்களுக்குக் கிடைக்கச் செய்யவேண்டுமென்பதே எங்கள் நோக்கம். பொருளாதார லாப நட்டப் புள்ளி விவரப்பட்டியல் மக்களுக்குப் புரியாதது.