பக்கம்:அண்ணாவின் சொல்லாரம்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46


எனவே சாதாரண மக்கள் தாங்கள் முன்னைவிட வலிவுடன் இருக்கிறோம், உடல் நலமுடன் இருக்கிறோம், என்ற உள்ள நிறைவோடு இருக்கத்தக்க வகையில் பணிகள் நடைபெற ஒத்துழைப்பு இருக்குமென்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு.

பொருளுற்பத்தி செழிக்க உள்நாட்டு மார்க்கெட் வலிவானதாக இருக்கவேண்டும், மக்களிடம் வாங்கும் சக்தி வளரவேண்டும். அது வளராது பொருளுற்பத்தி மட்டும் பெருகுவதால் அதன் முழுப்பலனையும் அடைய இயலாது.

ஐந்தாண்டுத் திட்டங்கள் நல்ல நோக்கத்துடன் கூடியவைகளே. ஆனால் அதனால் விளைந்த பலன்கள் நாம் எதிர்பார்த்தபடி இல்லை. திட்ட இலக்குகளுக்கும் அசல் சாதனைகளுக்கும் சம்பந்தம் இருப்பதில்லை -- அரசியல் மேடைகளைப் பார்த்தால் ஐந்தாண்டுத் திட்ட இலக்குகளை மட்டும் பட்டியல் போட்டுக் காட்டுவதோடு நிறுத்திக்கொள்வார்கள். அசல் சாதனைகள் இன்னதென்று சொல்ல அஞ்சுவார்கள்.

நான்காவது ஐந்தாண்டுத் திட்டமாகிலும் வேறுபட்டு இருக்குமென்று எதிர்பார்ப்போம் -- புதிய திருத்திய திட்டக்குழு, வெங்கட்ராமனைப் போன்றவர்களை அங்கத்தினர்களாகக் கொண்டு ஏற்பட்டுள்ளது. அனுபவ ரீதியாக இக்குழு செயல்படுமென்று நம்புகிறேன்.

நான்காவது ஐந்தாண்டுத் திட்டம் அது பிறப்பதற்கு முன்னே இரண்டு வயதை அடைந்துவிட்டது, இன்னும் அந்தரத்தில் நிறுத்தாமல் அந்தத் திட்டம் என்னென்ன என்பதை மக்களுக்கு நாம் தெரிவித்தாக வேண்டும்.

எந்தத் திட்டமாயினும். விவசாயத்தை பலமுடையதாகச் செய்யக் கூடியதாகவே அமையவேண்டும். இது அனைவராலும் இப்போது ஒப்புக் கொள்ளப்பட்டு விட்டது.