பக்கம்:அண்ணாவின் சொல்லாரம்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98


தொழில்கள் பெருகி நாட்டின் உருவையே மேம்பாடுறச் செய்திடலாம்.

தமிழ் நாட்டின் இன்றைய விவசாயி புதிய முறைகளைக் கையாண்டு விவசாயத்தில் வளம் காணத் துடிக்கிறான் எந்த முறையானாலும் முதலில் மற்றவர் செய்து பார்க்கட்டும் - அப்புறம் நாம் செய்யலாம் என்ற அளவில்தான் அவனது பழமைப் போக்கு உள்ளது.

ஜீவ நதிகள் இல்லாத தமிழ் நாட்டில் நாம் பயிர் பாசனத்துக்கு நிலத்தின் அடியில் உள்ள நீரையே பயன்படுத்த வேண்டியவர்களாக இருக்கிறோம் - நிலத்தினடி நீரைப் பொறுத்தமட்டில் நாம் மிக நல்ல நிலையில் வளமுடன் இருக்கிறோம். இந்த வளத்தைப் பயன்படுத்த இத்தகு இறவைப் பொறிகள் - வலுவுள்ள - உறுதியும் பாதுகாப்புமுள்ள - விலை மலிவாகவுள்ளவை நிறையத்தேவை.

இயந்திர உற்பத்தியாளருக்கு
இனிய வேண்டு கோள்

நாட்டுப் புறங்களில் நிலவும் வறுமையை உணர்ந்தவனென்கிற முறையில் இறவைப் பொறிகளை உற்பத்தி செய்வோருக்கு நான் முக்கிய வேண்டுகோள் விடுக்கிறேன் உங்கள் தயாரிப்புகளின் விலைகளைக் குறைத்திடுங்கள். சில ஆண்டுகளேனும் லாபத்தின் ஒரு பகுதியை இழந்தாயினும் விலை குறைக்க உற்பத்தியாளர்கள் தயங்கக் கூடாதென்று கேட்டுக் கொள்கிறேன்.

உற்பத்தி செய்துவிட்டு விலையைக் கூட்டி விட்டால்: அவை வெறும் காட்சிப் பொருள்களாகவே இருக்கும். அப்படியில்லாமல் இத்தகைய தொழில் உற்பத்திப் பொருள்கள் பட்டிகள்தோறும் பரவி விவசாயப் பெருங்குடி மக்களுக்கு அவர்கள் ஆற்றும் உணவு உற்பத்தியிப் பணியில் பலனளிக்கவேண்டும்.