பக்கம்:அண்ணா கண்ட தியாகராயர்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

11


வளர்ந்திருப்பதைக் கண்டு பெருமை அடைகிறோம். அரசியல் வாழ்விலே பலர் இடம் பெற்றிருப்பதைக் கண்டு பெருமை அடைகிறோம். அன்று தியாகராயர் மத விஷயங்களிலே புகவில்லை! புரோகிதத்தை எதிர்க்கவில்லை. ஏனென்றால் முதலில் அவர், திராவிடர்களுக்கு தன்னுணர்வையும் தன்மானத்தையும் உண்டாக்கவே விரும்பினார். மக்களுக்கு முதன் முதலிலே தன்னுணர்வை ஏற்படுத்தி மக்களைத் தட்டி எழுப்பிய பின்தான் அவர் மத விஷயத்திலே புக விரும்பினார். முதன் முதலில் நம் மக்களுக்கு என்ன தேவை என்பதை நன்குணர்ந்தே அவர் முதலிலே அப்படி ஈடுபட்டார்.

அன்றும் இன்றும்

அந்த நாளிலே டாக்டர்களிலே சிறந்தவர் யார் என்றால் டாக்டர் ரங்காச்சாரிதான் சிறந்தவர் என்று கூறப்பட்டது. இப்பொழுது டாக்டர்களிலே சிறந்தவர் யார்? டாக்டர் குருசாமி. இதைக் கேட்டு நாம் பூரிப்படைகிறோம். அந்த நாளிலே ஆங்கிலத்தில் பேசுவதிலே யார் சிறந்தவர் என்றால் ரைட் ஆனாபிள் - சீநிவாச சாஸ்திரியார் என்று மயிலையும் திருவல்லிக்கேணியும் சொல்லிற்று. இன்று நம் திராவிடப் பெருங்குடி மக்களிலே சிறந்த பேச்சாளர் யார்? என்றால் சர். ஏ. இராமசாமி முதலியார் என்றே யாவரும் கூறுவர். சிறந்த பொருளாதார நிபுணர் யார்? என்று அன்று கேட்டால் யார் யாரையோ கூறுவர். இன்று நம் சர். ஆர். கே. சண்முகம் தான் அங்கனம் யாவராலும் போற்றப்படுபவர். அல்லாமலும் தமிழிலே சிறந்த பாடகர் யார்? அன்று எஸ். ஜி. கிட்டப்பா என்று கூறப்பட்டது ; இப்பொழுது எம். கே. தியாகராஜ பாகவதர். நகைச்சுவையிலே மன்னன் யார்? அன்று ஒரு சாமண்ணா இன்று நம்முடைய என். எஸ். கிருஷ்ணன் ஹிந்து பத்திரிகையிலே எழுதப்படும் தலையங்கங்களை விட சிறந்த தலையங்கங்களை ஆங்கிலத்தில் தீட்ட நம்மிடையே டாக்டர் கிருஷ்ணசாமி இருக்கிறார்.