இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
59
ஆயிரத்தொள் ளாயிரத்து நாற்ப தாண்டில்
ஆரூரில் மாநாடு கூட்டி னர்காண்
தாயகத்தைத் தனியாக்கித் தழைக்கச் செய்யத்
'தமிழ்நாடு தமிழர்க்கே!' எனுமு ழக்கம்
பாயிரமாய்க் கொண்டிருந்த நீதிக் கட்சிப்
பாவலனாம் அண்ணாவின் புதுமை யான
தூய 'திரா விடநாடு திராவி டர்க்கே!'
தொடங்கியதும் இங்கேதான்; தொடர்ந்த தன்றோ!
கன்னடமும், மலையாள மும்தெ லுங்கும்
கவின் தமிழின் திரிபுகளே! அவ்வி னத்தார்
தென்னகத்தில் ஒரே குடும்பம்! மொழியால், பண்பால்,
தேயாத நாகரிகக் கலாச்சா ரத்தால்!
தொன்மைமிகும் திராவிடத்தை ஆரி யத்தின்
தொடர்ச்சியான படையெடுப்பும் சிதைக்க வில்லை!
அன்னவரே வரலாற்றால், நிலவளத்தால்
அழகான கூட்டரசு சமைத்தல் கூடும்!