24
ஜம்பு : நீங்கள் லீலாவைச் சிறு பிள்ளையில் பார்த்தது தான் போலிருக்கிறது! அதனால்தான் இவ்வளவு அலட்சியமாய்ப் பேசுகிறீர்கள், இப்பொழுது லீலாவைப் பார்த்தால், ஆஹா.... உயிரையே கொடுத்து விடமாட்டீர்களா! இதோ பாருங்கள் இந்தப் படத்தை ரொம்பக் கஷ்டப்பட்டு உங்களுக்காக இதை ஒரு இடத்திலிருந்து வாங்கிக்கொண்டு வந்தேன்.
[படத்தைக் கொடுக்கிறான். திவான் பகதூர் பார்த்துப் பிரமிக்கிறார்.]
பொன் : யார், இது? என் தங்கை மகள் லீலாவின் படமா? உம் உண்மையாகவே? அடடே என்ன ரம்பை மாதிரியல்லவா இருக்கிறாள்! நான் ரொம்பச் சின்னப் பிள்ளையாக இருக்கும்போது பார்த்தது. பெரிய மனுஷி ஆனபிறகு பார்த்ததே இல்லை. உம்... ஜம்பு! இவளை நான் எப்படியும் கல்யாணம் செய்துதான் ஆகவேண்டும். இவ்வளவு நாளாக எனக்கு இந்தத் தகவல் தெரியாமல் போய்விட்டதே! பூசாரி, பாரையா, எப்படி?
முனி : ஆஹா! வெகு பொருத்தம். அநியாயமா அமைஞ்சிருக்கு.
பொன் : ஒய் கணபதி ஐயர்!
கணபதி : இதோ வந்துட்டேன். (வருகிறார்)
ஜம்பு : இதென்னயா கரண்டியோட......!
கணபதி : பால் அடுப்பிலே இருக்கு.
பொன் : இந்தப் படத்தைப் பாரும்! எப்படி?
கணபதி : எங்கேயோ பார்த்தாப்போல......ஓ, நம்ம பாலுக்கார முத்தம்மா மகளோ?