பக்கம்:அனிச்ச மலர்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

21



நீக்கிவிட்டுத் திறந்த நிலையில் வராந்தாவில் வைத்து விட்டார்கள்.

சுற்றிலும் கண்ணாடி அடைப்பு வைத்து இரகசியமாகப் பேசுவதற்குப் 'பூத்' அமைத்து, வசதி செய்து கொடுத்தால்தான் நிறையப் பேச வருவார்கள். அந்த வசதிகளைக் குறைத்துவிட்டு, ஃபோனை வராந்தாவில் வைத்துவிட்டாலே முக்கால்வாசி மாணவிகள் பேசுவதைக் குறைத்துக்கொண்டு விடுவார்கள் என்று யோசனை செய்து பிரின்ஸிபால் அம்மாள் இந்த முடிவுக்கு வந்திருந்தாள். டெலிபோனைச் சுற்றி இருந்த கண்ணாடி அடைப்புக்கள், தடுப்பு மரச்சுவர், கூண்டு எல்லாவற்றையும் நீக்கிவிட்டு, வராந்தாவில் சுவரை ஒட்டினாற்போலக் காசு போடுகிற பெட்டி, டெலிபோன் கருவி எல்லாவற்றையும் பொருத்திய பின்பும் கூடக் கூட்டம் என்னவோ குறையவே இல்லை. அவ்வளவு பேருக்கும் சேர்த்து ஒரே டெலிபோன் என்று ஆகியிருந்ததனால், கூட்டம் முன்னைவிடப் பெருகியிருந்தது. திறந்த வெளியில், வராந்தாவில் 'பிரைவஸி' இல்லாமல் பேச நேருகிறதே என்பதாலும் மாணவிகள் கவலைப்பட வில்லை. எப்படியோ பேசிச் சமாளித்துக் கொள்ளப் பழகியிருந்தார்கள். டெலிபோன் பேசுவதற்காகச் சுமதி படியிறங்கி வந்தபோதும் ஃபோனடியில் இரண்டு மூன்று மாணவிகள் கூடி நின்றுகொண்டிருந்தனர். எவ்வளவோ அசெளகரியங்கள் இருந்தும், மாணவிகளின் ஃபோன் பேசுகிற ஆர்வமோ, ஃபோனுக்காகக் காத்து நிற்கிற ஆர்வமோ ஒரு சிறிதும் குறைந்ததாகத் தெரியவில்லை. காத்திருக்க வேண்டும் என்பதோ, டயல் செய்து விட்டுப் பத்துக்காசு நாணயங்களாகத் தயாராய் மாற்றி வைத்திருந்து சிலவற்றை எண்ணிப் போடவேண்டுமென்பதோ ஒரு சிறிதும் பாதித்திருக்கவில்லை.

ஃபோனருகே காத்திருந்த மாணவிகள் பேசிவிட்டுப் போகட்டும் என்று சுமதி ஒதுங்கி நின்றுகொண்டாள். சிறிது முன் படித்த கடிதத்திலிருந்து குறித்துக் கொண்டு வந்திருந்த ஃபோன் நம்பர், கையில் பத்திரமாக இருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அனிச்ச_மலர்.pdf/23&oldid=1134569" இலிருந்து மீள்விக்கப்பட்டது