பக்கம்:அன்னை கஸ்தூரிபாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

அன்னை கஸ்தூரிபாயின்




புலால் எதிர்ப்பு: டாக்டருடன் வாதம்

தென் ஆப்பிரிக்காவில் காந்தி சட்ட மறுப்பு, நிறவெறி எதிர்ப்பு அறப்போர் நடத்திய போது, கஸ்தூரி பாய் ஓய்வு ஒழிச்சல் இன்றி உழைத்து ஓடாய் தேய்ந்ததால், ரத்தப் பெருக்கு நோய் ஏற்பட்டு உயிர் பிழைப்பதே கடினம் என்ற நிலை உருவாகிவிட்டது.

கஸ்தூரி பாய்க்கு மருத்துவச் சிகிச்சை பார்த்த டாக்டர் காந்திக்கு மிகவும் நெருக்கமான நண்பர்களிலே ஒருவர். அதனால் அவர், கஸ்தூரி பாயை மிகப் பொறுப்புடனும், அக்கறையுடனும் கவனித்து, உடனே அறுவைச் சிகிச்சை செய்தால் தான் அவர் உயிர் பிழைப்பார் என்று காந்தியிடம் கூறினார்.

முதலில் கஸ்தூரி பாய் தயங்கினார்! காரணம், அவரது உடல் ஓயாத ரத்தப் பெருக்கால் மிகவும் பலம் குன்றிப் போயிருந்தது. பிறகு, அவர் அறுவைச் சிகிச்சைக்கு ஒப்புக் கொண்டார்.

மயக்க மருந்து கொடுக்காமலேயே டாக்டர் அவருக்கு அறுவைச் சிகிச்சையை வெற்றிகரமாக நடத்தி முடித்தார். என்றாலும், அவர் அறுவைக்குப் பிறகு மேலும் பலவீனம் அடைந்தார். இந்த சிகிச்சை டப்ளின் நகரிலே நடந்தது.

ஜோஹன்ஸ் பர்க் என்ற நகரிலே காந்திக்கு ’இந்தியர் காங்கிரஸ்’ இயக்கப் பணி அதிகமாக இருந்ததால், அவர் டாக்டரை நம்பி, அவரது உத்தரவைப் பெற்று, ஜோஹான்ஸ் பர்க் நகரை வந்தடைந்தார்.