விந்தன்
23
நான் திடுக்கிட்டேன்; "எது உண்மை? உங்களைக் கல்யாணம் செய்துகொள்ளாமல் உங்களுடைய பணத்தை நான் கல்யாணம் செய்துகொண்டதா உண்மை?" என்று திருப்பிக் கேட்டேன்.
"ஆம்!" என்றார் அவர், அழுத்தந் திருத்தமாக.
"அப்படியானால் என்னுடைய அன்பில் உங்களுக்கு நம்பிக்கையில்லையா?”
"கிடையாது; கிடையவே கிடையாது!”
அவ்வளவுதான்; ஆத்திரம் பற்றிக் கொண்டு வந்து விட்டது எனக்கு. "அட, பாவி!" என்று கத்திய வண்ணம் அவருடைய கன்னத்தில் ஒங்கி அறைந்து விட்டேன்!
அடிபட்ட இடத்தைத் தடவிக் கொடுத்தபடி அவர் சிரித்தார்; விழுந்து விழுந்து சிரித்தார். "இப்போது தான் உன்னிடம் எனக்கு நம்பிக்கை பிறந்தது; இப்போதுதான் உன்னிடம் எனக்கு நம்பிக்கை பிறந்தது!" என்று சொல்லிச் சொல்லி, விழுந்து விழுந்து சிரித்தார்!
எனக்கு ஒன்றும் புரியவில்லை. பரக்கப் பரக்கப் பார்த்தேன்; பயந்து பயந்து விழித்தேன்.
"அணைத்துக்கொள், லலிதா! அடித்த கையால் என்னை அன்புடன் அணைத்துக்கொள், லலிதா' என்றார் அவர், நாத் தழுதழுக்க,
"நீங்கள்...... நீங்கள்......"
அதற்கு மேல் என்னால் ஒன்றும் பேச முடியவில்லை, தடுமாறினேன்.