பக்கம்:அபிதான சிந்தாமணி.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கடவுள் துணை

முதற்பதிப்பின்

முகவுரை


மதிமிசை மிலைந்த மாப்பெரு மிமயந்
துதிபெறு கன்னித் துணையா யமைந்த
அந்தமில் பாரதப் பதியி னருந்தமிழ்
நந்த லில்லாத் தமிழ்நா வலர்மின்
பந்த மொருவாப் பசுவா நாயோன்
கொந்தா ரிரவிமுன் கொளுமின் மினியும்
அலைநிரை யளக்கர்மு னருநீர்க் காலென
புன்மொழி கொண்டு புகல்சில வாசகம்
என்னா லியன்ற தெழுதின னதனிடை
மாசுள தாயின் மறுவில தாக
வேச லிலாது வேற்றுக் கொள்கை
கடமையென் றெண்ணிக் கதைபல கொண்ட
நடையமை சிந்தா மணிநவின் றேனே.

அருங்குண நிறைந்த அன்பர்காள்!

நானிந்த அபிதான சிந்தாமணி யென்னு நூலைச் சற்றேறக்குறைய 1890-ம் வருஷங்களுக்குமுன் தொடங்கினேன். இது எனது அரிய நண்பரும் சென்னை பச்சையப்ப முதலியார் ஹைஸ்கூல் எட்மாஸ்டருமாகிய ம-௱-௱-ஸ்ரீ- கோபாலராயரவர்கள், B.A., எனமண்டரம் வெங்கடராமையரவர்கள் செய்த புராணநாம சந்திரிகை போல், தமிழில் ஒன்று இயற்றின் நலமாமென்று அந்தப் புத்தகமும் ஒன்று கொடுத்துதவ, அதை முதனூலாகக் கொண்டு புராண நாமாவளியென்று பெயர் புனைந்து எழுதத் தொடங்கினது. அந்தூல் எனக்குக் காட்சி மாத்திரையாயிற்றேயன்றி சாலப் போதாது. ஆதலினது நிரம்பிய நூலொன்றெனத் தேறிப் பன்னூலராயத் தொடங்கி வேறு பொழுது போக்கக் கொள்ளாது, இதனிடை முயன்று வருந்தினேன். இதனை விளையாட்டாகத் தொடங்கினேன். பின்னரிதனை முடிப்பது எவ்வாறென்ற கவலை மிக்கது.

இது காரணமாக நான் ஒருவனே பலர்கூடிச் செய்ய வேண்டிய இதனை ”சுலேகபோதநியாயமாக” பல விடங்களிற் சென்று பல அரிய கதைகளைப் பல புராண, இதிஹாஸ, ஸ்மிருதி, ஸ்தல புராணங்களிலிலும், மற்றுமுள்ள நூல்களிலு-