பக்கம்:அபிதா.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அபிதா O 81

என்னைச் சூழ்ந்திருக்கும் அமைதியில், இவ்வமைதியே மோன கர்ப்பத்தின் தாது. சப்தங்கள் சலனத்தின் சதங்கைகள்.

கரையோரம் கத்தாழையையும் முட்களையும் கடந்ததும் இடம், தழைத்த இடை போன்று அகன்று என்னைத் தன் வயிற்றுள் வாங்கிக் கொள்வதுபோல் ஒரு மாந்தோப்புள்- (தோப்பா? தொப்புளா?)- அழைத்துச் செல்கிறது. ஏதோ ரஹஸ்ய ஜாலத்தில் இயற்கையின் சதியில் மாட்டிக் கொண்டிருக்கிறேன்.

ஒரு மரத்தின்பின் ஒருஆள் பதுங்குகிறான், ஏன்?

வில்லி. அவன் இன்னும் என்னைப் பார்க்கவில்லை.

மாங்காய் திருடப் போகிறானா? ஆனால் இப்போ மாங்காய்க் காலமில்லையே!

அவன் கையில் ஒரு கவண் தொங்குகிறது. அப்போதான் சுழல ஆரம்பித்திருக்கிறது.

ஓ! புரிந்தது. இவன் மாங்காய் அடிக்கவில்லை. ஏதோ பக்ஷியடிக்கப் போகிறான். வசியமுற்றவனாய்க் கவணையே பார்த்துக்கொண்டிருக்கிறேன். கவண் வேகமெடுத்துவிட்டது. மணிக்கட்டுக்கு மேல் கை ஆடவில்லை. கவண் ஒரு கணத்தில் சக்கரமாக மாறிவிட்டது. மரம் நிறைய இத்தனை பறவைகளில் இவன் குறி எதுவோ? எனக்கு உடல் பரபரத்தது. பொத்தென்று ஆகாயத்தி னின்று ஒன்று என் காலடியில் விழுந்து வெறும் மூக்கும், வெறித்த கண்ணும், சிறகும் இறகும் உரோமமுமாய் உயிரற்ற மொத்தையாய்க் கணத்தில் கண்ணெதிரே மாறுவதைக் காண எனக்குச் சக்தியிருக்குமோ? படம் பளிச்சென்று கண்ணைவெட்டி மறைவதற்கும் கவணிலிருந்து கல் புறப்படுவதற்கும் ‘வீல்’ என்று என்னின்று ஒரு அலறல் கிளம்புவதற்கும் சரியாயிருந்தது. ஒரு பக்ஷிக் கூட்டம் வைது கொண்டு மரத்தை விட்டுக் கிளம்பிச் சிதறுண்டது.

அ- 8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அபிதா.pdf/87&oldid=1130513" இலிருந்து மீள்விக்கப்பட்டது