பக்கம்:அபிராமி அந்தாதி.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

அபிராமி அந்தாதி

(உரை) சிந்துரத்தின் செந்நிறம் வாய்ந்த திருமேனியை யுடைய தேவி, என் சிரத்தின்மேல் முடிபோலத் திகழ்வது நின் பொலிவு பெற்ற திருவடியாகிய தாமரை மலர்; நெஞ்சத்துள் நிலைபெற்று இருப்பது உன் அழகிய மந்திரம்; நின்னையே தியானிக்கும் நின் அடியார்களுடன் கலந்து முறைப்படி அடுத்தடுத்து நான் பாராயணம் செய்வது உன்னுடைய மேலான ஆகம பத்ததியே யாகும்.

மனம், வாக்கு, காயம் என்னும் முக்கரணங்களாலும் வழிபடுவதைக் கூறுகின்றார். பொன் - பொலிவு. முறை முறையென்ற பன்மை பலகாலும் பாராயணம் செய்தலை அறிவித்தது. பரம ஆகம் பத்ததி - சாக்தாகம வழிவந்த நூல்கள். சதாசார பத்ததி யென்பதுபோல நூல்கள் பத்ததி யென்ற பெயரோடு வழங்குதல் காண்க.

6

ததியுறும் மத்திற் சுழலும் என்
ஆவி தளர்விலதோர்
கதியுறு வண்ணம் கருதுகண்
டாய்கம லாலயனும்
மதியுறு வேணி மகிழ்நனும்
மாலும் வணங்கி என்றும்
துதியுறு சேவடி யாய்சிந்து
ரானன சுந்தரியே.


(உரை) தாமரை மலரை இருக்கையாகக் கொண்ட பிரமதேவனும், சந்திரனைத் திருமுடியில் தரித்த நின் கணவராகிய சிவபெருமானும், திருமாலும் வழிபட்டு எந்நாளும் தோத்திரம் செய்யும் செம்மையாகிய திருவடியை யுடையாய், சிந்துரத்திலகம் அணிந்த திருமுகத்தையுடைய பேரழகியே, தயிரில் கடைதற்காக அமைந்த மத்தைப் போலப் பல பிறவிகளில் சுழன்று திரியும் அடியேனது உயிர், பிறப்பிறப்பென்னும் தளர்ச்சி இல்லாததாகிய