பக்கம்:அபிராமி அந்தாதி விளக்கம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
காரமர் மேனிக் கணபதி

அபிராமியைப் பாடத் தொடங்குகிறார் அபிராமி பட்டர். அந்தப் பெருமாட்டியின் திருவருளால் பாடத் தொடங்கினாரானாலும், அப்பிராட்டியின் குமாரனாகிய கணபதியைத் தொழுதுதானே எதையும் தொடங்க வேண்டும்? "எந்தக் காரியம் யார் செய்தாலும், உன்னை வழிபட்டால் விக்கினத்தை நீக்கவும், வழிபடாமல் இருந்தால் விக்கினத்தை ஆக்கவும் செய்யும் அதிகாரம் உனக்கு உண்டு" என்று தாயும் தந்தையும் சேர்ந்து அருளியபடி விநாயகர் விக்கினேசுவரராக எழுந்தருளியிருக்கிறார். முப்புரம் எரித்தபோது இந்தச் சட்டத்தை மீறி விக்கினேசுவரரை வழிபடாமல் சிவபெருமான் புறப்பட்டபோது அவனுடைய தேரின் அச்சு விநாயகர் ஆணையால் ஒடிந்து விட்டது என்பது புராணவரலாறு. சட்டத்தை உண்டாக்கினவனானாலும் அவன் சட்டத்துக்கு உட்பட்டு நடக்க வேண்டும் என்ற உண்மையை இந்தத் திருவிளையாடலால் இறைவன் உணர்த்தினான்.

ஆகவே, அபிராமி அந்தாதியைப் பாடுவதற்கு அப்பெருமானுடைய கருணையும் இருந்தால் அது எளிதில் நிறைவேறும் அல்லவா? அந்தக் கணபதியினிடம், "பெருமானே, உன்னுடைய அன்னையாகிய அபிராமி யைப் பாடப் போகிறேன். அதற்கு வேண்டிய உதவி யெல்லாம் புரியவேண்டும்" என்று பிரார்த்தனை செய்து கொண்டு, முதலில் விநாயகர் காப்பைச் சொல்கிறார் அபிராமிபட்டர்.

★ ★ ★