உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 11.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

(146) || அப்பாத்துரையம் 11

நாடுகளிலும், சப்பானிலும் உள்ள கோயில்கள், நாடகங்கள் ஆகியவற்றின் ஒப்புமைகள் வரலாற்றுக்காலத் தொடர்பு கடந்தவை. இன்று சீனர் மங்கோலிய இனத்தவர் என்று எப்படியோ கருதப்பட்டு வருவதனால், சீனரின் தென்கிழக்காசியத் தொடர்பு மறக்கப்பட்டு, மறைக்கப்பட்டு வருகிறது. ஆனால் சீனரே வடசீனத்தின்மீது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் படை எடுத்துச் சூறையாடிய மங்கோலியக் காட்டுமிராண்டிகளை வெறுத்தனர். அவர்களைத் தடுத்து நிறுத்துவதற்காக அவர்கள் கட்டிய நாலாயிரம் கல் நீளமுடைய கோட்டை, 'நெடுமதில்' என்று இன்றளவும் உலக அதிசயங்களில் ஒன்றாகப் பாராட்டப்படுகிறது. மங்கோலியரும் அவ்வினத்தவரான மஞ்சூரியரும் குடியேறி வாழ்ந்த பகுதி இன்றும் மங்கோலியா, மஞ்சூரியா என்று குறிக்கப்படுகின்றது. தென்சீனம், இன்றைய வடமங்கோலிய மஞ்சூரியப் பகுதிகளிலும் பழமை வாய்ந்த நாகரிகமுடையதென் பதையும், அதுவே உண்மைச் சீனம், பண்டிருந்து நாகரிகம் வளர்த்த சீனம் என்பதையும் இது காட்டுகிறது. தமிழ், தமிழின நாகரிகங்களுடன் இனத்தொடர்பும் நாகரிகத் தொடர்பும் தொல்பழங்கால வரலாற்றுத்தொடர்பும் மிக்க பகுதி இது.

பண்டைத் தமிழரும், மலாய் மக்களும் கடலோடிகளாய் இருந்தனர். பிரிட்டன் உலகில் ஒரு பெருங்கடலரசாக வளர்ந்த காலம் 19-ஆம் நூற்றாண்டேயாகும். அதுவரை உலகின் கடற்பேரரசகளாகவும் வாணிகப் பேரரசுகளாகவும் நிலவியவர்கள் இவர்களே. மேற்கே நடுநிலக்கடல் நாடுகளில் பரவிய 'திரையர்’ பண்டைத் திராவிட இனத்தவரே என்று திருத்தந்தை ஹீராஸ் குறிப்பிடுகிறார். அதுபோல அவர்கள் கிழக்கேயும் சீனம், சப்பான் கடந்து நெடுந்தொலை கடல் கடந்தும் கடலோரமாகவும் பரவியிருந்தனர். அமெரிக்கப் பழங்குடி மக்களைப்பற்றி ஆராய்பவர்கள் அக்கண்டத்தின் பழம்பெரு நாகரிகங்களான மய, இங்கா, பெருவிய இனங்கள் திராவிட இனத்துடனும் தென்கிழக்காசிய நாகரிகத்துடனும் மிகப் பழந்தொடர்புடையவை என்று குறித்துள்ளனர். வெற்றிலை, பாக்கு, சுண்ணக்கலவை இத்தொடர்புக்குரிய ஒருசின்னம் என்று அவர்கள் கருதுகின்றனர்.

இங்ஙனம் விந்தமுதல் குமரிவரை மொழியின வாழ்வு பெருக்கி, மேற்கும் கிழக்கும் பண்டை நாகரிக உலகெங்கணும் பண்பு பரப்பிய உலகின் தலைமாநிலமே திராவிட நாடு.