உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 11.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4. வாழ்வும் வீழ்வும்


கதிரவன் வழிபாடு, நாக வணக்கம், உழவுத் தொழில், நெற்பயிர் விளைவு, பருத்தி நூற்றல், நெசவு, ஆநிரை பயிர்ப்பு முதலிய பண்புகளை உலகெங்கும் பரப்பிய ஒரு தொல் பழங்காலப் பேரினம் இருந்ததென்று, ‘கதிரவன் சேய்கள்' என்ற பழமையாராய்ச்சி நூலில் டபிள்யூ. ஜே. பெரி என்ற அறிஞர் விரித்து விளக்குகிறார். எகிப்தியரும், தென்னாட்டவரும் இவ்வினத்தின் இரு பெருங்கிளைகள் என்று அவர் கருதுகிறார். 'உலக வரலாறு' இயற்றிய எச். ஜி. வெல்ஸ் என்பார், மேற்கிலும் கிழக்கிலுமட்டுமன்றி, வடக்கிலும் தெற்கிலும்கூடக் கிட்டத்தட்ட நாகரிக உலகெங்குமே தமிழினத்துடன் தொடர்புடைய ஒரு பழம்பேரினம் பரவியிருந்ததென்றும், மற்ற உலகப் பகுதிகளில் அது பின்வந்த பல இனங்களுடன் கலந்துவிட்டாலும், கிட்டத்தட்டத் தனிப் பண்புடன் தென்னாட்டில் இன்றுவரை உயிர் வளர்ச்சிபெற்று வருகிறதென்றும் தெரிவிக்கிறார்.

மொழிப்பண்பிலும் வானூல், உழவு, நெசவு, கரும்பாலைத் தொழில், இரும்பு, கனிச்சுரங்கத் தொழில், சிற்பம் ஆகியவற்றிலும் இன்றைய மனித நாகரிகம் தொடங்கு முன்பே தமிழினத்தவர் இக்கால உலகம் வியந்து மூக்கில் கை வைக்கும் உயர் வளம் பெற்றிருந்தனர் என்று கில்பர்ட் ஸ்லேட்டர் என்பார் ‘இந்திய நாகரிகத்தில் திராவிடப் பண்பு' என்ற நூலில் குறித்துள்ளார்.

இவ்வாறு பண்டைப் பழங்காலத்திலிருந்தே வாழ்ந்த மாநிலம், நாகரிகம் தோற்றுவித்து வளர்த்து, உலகில் பண்பும் கலையும் பரப்பி வழிகாட்டி உலகாண்ட நாடு திராவிடம். இன்னும் உலகாள, உலகின் மறுமலர்ச்சி தூண்டிப் புத்துலகம் ஆக்க, புதுவாழ்வு காணத்துடிக்கும் மறுமலர்ச்சி, புது மலர்ச்சிக் கனவுகளைத் தன்னுள் கருநிலையில் அடக்கிக்கொண்டிருக்கின்ற நாடு அது. ஆனால் தற்போது அது பண்டைப் பெருமையும்