உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 33.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
104 ||

அப்பாத்துரையம் - 33




அவன் எருமைக்கு வணக்கம் செலுத்தி அதன் முதுகில் ஏறினான். அது நாழிகைப் பொழுதுக்கு ஏழு நாளிகை வழியாக விரைந்து சென்றது. அந்தக் காட்டின் எல்லையில் மீண்டும் பொன்மயிலின் சுவடு தென்பட்டது.

எருமையிடம் நன்றி தெரிவித்துவிட்டு அவன் நடந்தான்.

மறுபடியும் சுவடு நின்றுவிட்டது. முத்தன் மீண்டும் இருந்து கண்ணீர் விட்டான். இந்தத் தடவை ஒரு மான் அவன் மீது இரக்கப்பட்டது. அது அவனை அடுத்த சுவடு காணும் இடம் வரை கொண்டு விட்டது.

மறுபடியும் சுவடு நின்றது. ஆனால், இப்போது அவன் மயனுலக எல்லைக்கு வந்துவிட்டான் அது எங்கும் கரடிக் கல், புலிக்கல், யானைக் கற்கள் நிறைந்து, மலைப்பாங்காய் இருந்தது. தொலைவில் ஒரு மலையுச்சியில் பொன்மரம் ஒன்றின் கிளையில் தங்கமயில் உட்கார்ந்து கொண்டிருந்தது. பொன்மரத்தின் இலைகள் மரகதமாய், தளிர்கள் கோமேதகங்களாய், மலர்கள் வைரங்களாய், கனிகள் மாணிக்கங்களாய் இருந்தன.

பயணம் கிட்டத்தட்ட முடிந்ததென்று முத்தன் களிப்படைந்தான்.

ஆனால், அவன் நினைத்தபடி பயணம் முடிந்து விடவில்லை. பாறைகளுக்கிடையே ஆழமான பள்ளங்கள் இருந்தன. தவிரக் கரடிபோல இருந்த கற்களுக்கிடையே கரடிகள் சுற்றின. புலிபோல இருந்த புலிக்கற்களைச் சுற்றிப் புலிகள் உறுமின. ஆனை போலிருந்த ஆனைக் கற்களைச் சுற்றி ஆனைகள் வீறிட்டன.

அவன் குந்தியிருந்து அழுதான்.

ஒரு கரடி அவனிடம் வந்தது. “என் முதுகில் ஏறிக் கொள்” என்றது. அது கரடிக் கற்களைத் தாண்டி அவனைக் கொண்டு போய் விட்டது.

அவன் மீண்டும் குந்தியிருந்து அழுதான்.

ஒரு புலி அவனிடம் வந்தது.

அது அவனைப் புலிக்கற்கள் தாண்டிக் கொண்டு போய் விட்டது.