உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 39.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




28

அப்பாத்துரையம் - 39

பெயரிட்டிருக்கின்றனர். இன்றும் இந்தியாவில் கிடைக்கும் தங்கத்தில் நூற்றுக்குத் தொண்ணூற்றைந்து பங்கு விளைவைத் தரும் கோலாற்றுத் தங்க வயல்கள் காவிரியாற்றின் தலைப் பிலேயே இருத்தலைக் கவனிக்கவேண்டும்.

ஆனால் நீரில் கலந்த பொன்னைவிட மணலில் கண்ட நுண் பொடிகள் காட்சிக் கெளியவை. கடுமுயற்சியால் பல இடங்களில் அவை உழைப்புக்கு ஊதியமும் தருகின்றன. மணலுடன் கலந்து பெரும்படியாகப் பொன் இன்று எடுக்கப்படு மிடங்கள் வட அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியோவும் கொலராடாவுமே யாம். மணலிற் கிட்டும் மணிக்கற்கள் மணல்போல் ஒரே படித்தாக எப்போதும் கிடைக்காமல் என்றேனும் தற்செயலாகவே கிடைக்கின்றன. ஆயினும் அவற்றைத் தேடிச் சென்றவர் ஆற்றின் விழுவாயான கடலிலிருந்து அகன்று அதன் தலைப்பு ஆகிய மலையை நோக்கிச் செல்லுந்தோறும் இவை அளவில் பெரிதாகி வருவது கண்டனர். மேற்பார்வைக்கு மணிக்கற்களாகத் தோன்றாத சில கற்களும் எடை மிகுந்திருப்பது கண்டு அரு முயற்சியால் அதனை உடைத்துப் பொடியாக்கி உருக்கி நோக்க அவை உண்மையில் பொன்மிகுதியாய் உள்ள பொன்கலவைக் கற்களாயிருப்பதையும் (Nuggets) பலர் கண்டனர். பொன் மணலுக்கு அடுத்தபடி இக்கலவைக்கற்களே சிலகாலம் பொன்னின் தேற்றுவாய்களாக இருந்தன. இத்தகைய பொன் கலவைக் கற்களுள் மிகப் பெரியது ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த விக்டோரியா மாகாணத்தில் 1869-இல் கண்டெடுக்கப்பட்ட ‘நல் விருந்தினன்' (Welcome Strance) என்ற புனைபெயருடைய கல்லேயாகும். இது 2520 அவுன்சு நிறையுடையது. அகப்பட்ட நாளில் இது 13,600 பொற்காசுகள், அதாவது 2,44,000 இந்திய வெள்ளிகள் (ரூபாய்கள்) விலை பிடித்ததாம். சில இடங்களில் இத்தகைய கலவைக் கற்கள் மிகுந்து கூழாங்கற்களாக அகப்படுகின்றன. அவற்றைப் பொறிகளால் உடைத்துப் பொன் புது முறையில் எடுக்கப்படுகிறது. இத்தகைய இடங்களுள் சிறந்தவை வடமேற்கு அமெரிக்காவிலுள்ள அலாஸ்காவும் தென் அமெரிக்காவிலுள்ள பிரேஸிலும் ஆகும்.

ஆற்றின் தலைப்பு நோக்கிச் செல்வதில் பயன் உண்டு என்று கண்ட பொன் ஆர்வமிக்க மனிதன் அதன் தலைப்புக்களிலுள்ள