உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 39.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




76

அப்பாத்துரையம் - 39

எடுத்துச் செல்ல மறந்துவிடாதேயுங்கள்" என்று அன்பரசி நயந்துரைத்தாள். போர்வையை அவன் தோளில் இட்டு குடையைக் கையில் தந்து அவனுக்கு விடைதந்து அனுப்பினாள்.

அன்பரசியின் அன்பொளி அருண்மொழியைச் சுற்றிலும் தொழிலகத்திலும் வீட்டிலும் எங்கும் உலவிற்று. தொழிலின் கடுமை இதுமுதல் அவனுக்கு ஒரு சிறிதும் கடுமையாகத் தோற்றவில்லை. அதற்கான தகுதிபெற அன்பரசியின் தோழமையைக்கூட அவன் துறக்கத் தயங்கவில்லை. அவள் வியப்படையும் வண்ணம் அவன் தொழிலக நேரம் வருமுன்பே தொழிலகம் செல்லப் புறப்படத் துணிந்தான். அதுபோலத் தொழிலக நேரம் கழித்தும் தொழிலக வேலையில் ஈடுபட்டிருந்து நேரம் சென்று வீடு திரும்பினான்.

பாடுமாங்குயிலே அவன் புதிய போக்குக் கண்டு ஒருநாள் அவனை அழைத்துப் பரிவுடன் பேசினாள்.

"அருள், நீ என் அண்ணன் பிள்ளைதான் என்பதில் ஐயமில்லை. கடமையில் அழுந்தி உடலைக் கவனிக்காமல் இருந்து விடுகிறாய். தொழிலகம் உன் மாமா தொழிலகந்தானே! ஏன் இப்படி இரவும் பகலும் சருகாய் உழைத்து உடம்பை அலட்டிக் கொள்ள வேண்டும்? நேரத்தில் சென்று நேரத்தில் வந்தால் என்ன?" என்று நயத்துடன் கேட்டாள்.

"மாமா தொழிலகம் என்றால் என்தொழிலகம் தானே, அத்தை? அதற்கு நானல்லாமல் வேறு யார் உழைப்பார்கள்? அன்பரசி ஆணாயிருந்திருந்தால் எப்படி உழைப்பார்களோ, அப்படி நான் உழைக்க வேண்டாமா?" என்றான் அவன்.

அன்பரசி இதைக்கேட்டுக் கொண்டே வந்தாள். அவள் உள்ளம் பாகாய் உருகிற்று. ஆயினும் அவள் அதை வெளிக் காட்டாமல் அடக்கிக் கொண்டு வெளிப்படக் கிளர்ச்சியுடன் பேசினாள்.

"நான் ஆணாயிருந்தாலும் எப்படியும் சமாளித்துக் கொள்வேன். ஆனால் நீங்கள் பெண்ணாயிருந்தால் என்ன ஆவீர்களோ?" என்றாள்.

அருண்மொழியின் உழைப்பார்வம் முற்றிலும் வீணாய் விடவில்லை. குடும்பப் பாசமற்ற பண்ணன் பாடிலியைக்கூட அது