உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 6.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கன்னட நாட்டின் போர்வாள் ஐதரலி

|| 217

படைகளின் வரவைத் தடுக்க ஹைதர் பல தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டான். வழி எங்கும் அணைகளை உடைத்து வெள்ளக் காடாக்கினான். பாதைகளைப் பாழாக்கினான். எல்லைப்புறங்களில் உணவுப் பொருள்கள் கிடைக்காதபடி அவற்றைத் தூர்த்தான்.ஆனால், பேஷ்வாவின் பெரும்படையை இவை நீடித்துத் தடைப்படுத்த முடியவில்லை.

மராட்டியர் சுரா மாகாணத்தை அடைந்தனர். மாகாணத் தலைவன் மீர் அலி ரஸாகான் ஹைதரின் மைத்துனன். அவனால் மிகவும் உதவப் பெற்றவன். ஆயினும் அவன் துணிந்து கடமை துறந்து பேஷ்வாவுக்குக் கோட்டையைத் திறந்து ஆதரவு தந்தான். இது ஹைதர் ஆற்றலுக்கும் ஊறு செய்தது. அவன் உள்ளத்தையும் புண்படுத்திற்று. இப்பகைச் செயலுக்குப் பரிசாக மராட்டியர் மீர் அலி ரஸாகானுக்குக் குர்ரம் குண்டாக் கோட்டையை வழங்கினர்.

ஹைதர் எப்படியாவது பேஷ்வாவுடன் இணங்கிப் போக முன்னிலும் மும்மரமான முயற்சி செய்தான். இத்தடவை சொல்திறமிக்க அப்பாஜிராம் என்ற தூதுவனை அனுப்பினான். அப்பாஜிராம் முயற்சி வெற்றி பெற்றது. முப்பத்தைந்து லட்சம் வெள்ளி பெற்றுப் படையெடுப்பை நிறுத்தப் பேஷ்வா ஒப்புக்கொண்டான். ஹைதர் உடனடியாகப் பாதிப் பணம் திரட்டிக் கொடுத்தான். மறுபாதிக்குக் கோலார் மாவட்டம் ஈடாக அளிக்கப்பட்டது. இம்மறு பாதியையும் விரைவில் திரட்டிக் கொடுத்து, அவன் கோலாரையும் மீட்டுக்கொண்டான். இவ்வாறு மலைபோல வந்த இடர் பனிபோல நீங்கிற்று.

மைசூர் படையெடுப்பில் மராட்டியருடன் நிஜாமும் பங்கு கொள்ள எண்ணியிருந்தான். ஆனால், அவன் படைகள் வந்து சேரு முன்பே நேச ஒப்பந்தம் முடிந்து விட்டது. ஆயினும் இந்தப் புதிய சூழ்நிலையையும் பயன்படுத்திக் கொள்ள நிஜாம் எண்ணமிட்டான். ஹைதருடன் சேர்ந்து ஆர்க்காட்டு நவாப் முகமதலியையும் அவன் கைப்பாவையாக நடந்துகொண்ட ஆங்கிலேயரையும் தாக்க அவன் திட்டமிட்டான்.

ஹைதர் இப்புதிய திட்டத்தை உள்ளூர விரும்பவில்லை. ஆயினும் நிஜாமின் வற்புறுத்தலுக்கு அவன் இணங்கினான்.