பக்கம்:அமுத இலக்கியக் கதைகள்.pdf/89

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



தளவரிசை

"இந்த இடம் மனத்துக்கும் உடம்புக்கும் இன்பம் தருவதாக இருக்கிறது. குற்றால மலையின் அழகைச் சொல்வதா? அங்கிருந்து எப்போதும் சலசலவென்று வீழ்ந்துகொண்டிருக்கும் அருவியைச் சொல்வதா? இங்கே எழுந்தருளியிருக்கும் திருக்குற்றால நாதரின் திருக்கோயில் அழகைச் சொல்வதா? இங்கே வீசும் காற்றுக்கு ஒரு பெருமை; இங்கே ஒடும் தண்ணீருக்கு ஒரு சிறப்பு."

ஒரு பெண்மணி இப்படிப் பேசினாள் அவளுடன் நடந்துகொண்டிருந்த மற்றொரு பெண்மணி, "ஆம், ஆம்" என்று அவள் பேச்சுக்கு ஊக்கம் ஊட்டி வந்தாள்.

"சுற்றிலும் என்ன அழகான சோலை! மனிதனுடைய முயற்சி இல்லாமல் இயற்கையிலே இவ்வளவு அழகை இங்கே இறைவன் கொட்டிக் குவித்திருக்கிறான். அவனுடைய பெருங் கருணையையும் பேராற்றலையும் என்னவென்று சொல்வது! இந்தச் சூழ்நிலையிலே தெய்வத்தன்மை மணக்கிறது; கண்ட கண்கள் குளிர்கின்றன; இந்தக் காற்றுப் பட்டு உடம்பு குளிர்கிறது; அருவியின் ஓசை கேட்டுக் காது குளிர்கிறது; பழமும் மலரும் நாவையும் நாசியையும் இன்புறுத்துகின்றன. எல்லாவற்றுக்கும் மேலாகத் திருக்குற்றால நாதருடைய தரிசனம் உள்ளத்தையே குளிர்விக்கிறது" என்று அந்தப் பெண்மணி பேசிக் கொண்டே சென்றாள்.