பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60 / அயோத்திதாசர் சிந்தனைகள்


மகனும் அதே சேணத்தொழில் செய்து சேலைநெய்யும் சாதி அல்லது சேணெய்யுஞ் சாதி என்று சொல்லவேண்டும் என்பான்.

ஓர் இளந்தை வயதுடையப் பெண்ணின் புருஷன் இறந்துவிடுவானாயின் அவளுக்கு மறுவிவாகம் செய்விக்காமல் தடுத்து அவளை அறுத்துகட்டா சாதி என்று சொல்லும்படி செய்வான்.

மற்றோர் இளந்தை வயதுடைப் பெண்ணின் கணவன் இறந்து மறுவிவாகஞ் செய்துக் கொள்ளுவாளாயின் அவளை அறுத்துகட்டுஞ் சாதி என்று சொல்லும்படி செய்வான்.

இவ்வகையால் எடுத்ததற்கு எல்லாம் சாதியம் படித்ததற்கெல்லாம் சமயமும் ஏற்படுத்தத்தக்க முயற்சியில் இருப்பார்கள் அன்றி தங்கள் விருத்தியையும் தேசவிருத்தியையும் நாடமாட்டார்கள்.

சுயமுயற்சியற்ற சூன்யநிலையில் சுயராட்சியம் என்னும் சொல்லும் பிறக்கப்போமோ.

சுயராட்சியம் என்றால் தங்கள் கொல்லைகளிலுள்ளக் கிள்ளுக் கீரைகள் என்று எண்ணிக் கொண்டனர்கள் போலும்.

அன்னிய ராஜாங்கச் செய்கையும் அவர்கள் முயற்சியும் அறிவின் விருத்தியும் ஒற்றுமெயும் சகலரையும் தன்னைப்போல் ஆதரிக்கத்தக்க குணமும் சகல சாதியோரும் தங்களைப்போல் ஆனந்தமான உடைகளை அணைந்து வண்டிகுதிரைகளில் ஏறி சுகமடைய வேண்டும் என்னும் ஆனந்தமும், தாங்கள் அருந்துஞ் சித்தசலங்களை சகல சாதியோரும் அருந்தி சுகமடைய வேண்டும் என்னும் அன்பும் இத்தேசத்தோருக்கு உண்டாமாயின் அக்காலமே சுயராட்சிய அஸ்திபாரமாகும்.

சுயமுயற்சிகளை விடுத்து சுயப் பிரயோசனத்தை நாடுவோர் வசம் சுயராட்சியம் அளிப்பது சுத்தப் பிசகேயாம்.

சுயராட்சியத்தை வைஷ்ணவர்களாகும் வடகலையார் வசம் ஒப்பி வைப்பதானால் தென்கலையார் தடுப்பார்கள் என்று தெரியாதோ. தென்கலையார் வசம் ஒப்பிவைப்பதனால் வடகலையார் வழக்கிற்கு வருவார்கள் என்று தெரியாதோ.

சைவர்கள் வைணவர்கள் ஒன்று சேர்த்து விட்டாலும் கிறிஸ்தவர்கள் கிட்டே நெருங்குவார்களோ.

வைணவர், சைவர், கிறிஸ்தவர் பொருந்திய போதிலும் மகமதியர் மகிழ்ச்சி கொள்வரோ. மகமதியர், வைணவர், சைவர், கிறிஸ்தவர் நால்வரும் பொருந்தியபோதினும் பெரியசாதிகள், சின்னசாதிகள் பொருந்தி வாழ்வரோ.

வைஷ்ணவர்கள் இருவருக்குள்ளும் ஒத்துப் போவார்களேயானால் சைவர்கள் சண்டைக்கு வருவார்கள் என்று தெரியாதோ.

சாதிகளுஞ் சமயங்களும் பொருந்திய போதினுஞ் சகலசாதியோருஞ் சுகமாக வாழவேண்டும் என்னும் குணம் வாய்க்குமோ.

அத்தகையப் பெறாமெய் குணங்களை வெளிக்குக் காட்டடாது உள்ளுக்கு வைத்திருந்த போதினுஞ் சுயராட்சியபார சதுர்வித உபாயம் விளங்குமோ ஒருக்காலும் விளங்கப் போகிறதில்லை.

அத்தகைய சதுர்வித உபாயம் விளங்கினும் இராட்சியந்திருந்த திரவியசேகர யுக்த்தி விளங்குமோ. திரவியசேகர யுக்த்தி விளங்கினும் வேற்றரசர் படை வருங்கால் அவர்களை ஜெயித்தாளும் புஜபல பராக்கிரமமுண்டோ. “குடிமி தட்ட வேண்டியதுதான்.”

இத்தியாதி விஷயங்களில் சீர்தூக்கிசெய்யும் கருமங்களை எண்ணித் துணியாமல் வீணே துணிந்து விழலுக்கிரைத்த நீர் போல் தாங்கள் கற்றக் கல்வியின் பயனால் தாங்களுஞ் சுகமடையாது தங்களை அடுத்தக் குடிகளையுஞ் சுகமடையவிடாது சீர்கெடுப்பது இராஜாங்கத்தோர் மீதுள்ள விரோதசிந்தை என்றே விளம்ப வேண்டியதாகும்.

- 2:9; ஆகஸ்டு 12, 1908 -

இராஜ அவிரோதமாகும் இராஜவிசுவாசம் இருக்குமாயின் இராஜ விரோதிகள் ஒருவரை தெண்டிப்பதினால் பத்துப்பெயர் சேர்ந்து பரிதாபக் கூட்டம்