பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அரசியல் / 67


காரணம், இச்சாதிபேதமற்ற திராவிடர்களையும் புத்தமார்க்கத்தையும் நசிக்க வேண்டி பௌத்தர்களை பறையர்கள் என்றும், தாழ்ந்தசாதிகள் என்றும் வகுத்து பறையர் என்னும் பெயரை பலவகையாலும் பரவவேண்டிய உபாயங்களையுஞ் செய்து ஊரிலுள்ள சுத்தஜலங்களை மொண்டு குடிக்க விடாமலும், குளிக்கவிடாமலும், அம்பட்டர்களை சவரஞ் செய்யவிடாமலும், வண்ணார்களை வஸ்திரமெடுக்க விடாமலும் தடுத்து அசுத்த நிலையடையச் செய்து நூதனமாக இத்தேசத்தில் குடியேறி வருபவர்களுக்குக் காண்பித்து இவர்கள் பறையர்கள் தாழ்ந்தசாதியோரென்றும் கூறி அவர்கள் மனதையும் கெடச்செய்து இவர்களை தலையெடுக்கவிடாமல் செய்ததுமன்றி கருணைதங்கிய பிரிட்டிஷ் துரைத்தனத்தில் இராணுவ உத்தியோகங்களிலும், பிரோட்டிஸ்டாண்டு கிறீஸ்து மதத்திலும் பிரவேசித்து கல்வியும், செல்வமும் நாகரீகமும் மிகுத்துவருங்கால் அவர்கள் சுகத்தைக் கண்டு மனஞ்சகியாத சாதிபேதமுள்ளவர்கள் யாவரும் மேற்சொன்னபடி உத்தியோகங்களிலும், மதத்திலும் பிரவேசித்து சாதிபேதமில்லா திராவிடர்களுக்கு அங்குஞ் சுகம் கிடைக்கவிடாமல் செய்துவிட்டதுமன்றி செய்தும் வருகின்றார்கள்.

இதற்கு பகரமாய் தற்கால சுதேச விருத்திக் கூட்டத்தார் பணஞ் சேகரிக்கும் விஷயங்களில் சாதிபேதம் கிடையாது, சகலசாதியோரிடத்திலும் பணம் வசூல் செய்யலாம் என்று கூட்டங்களிலும், பத்திரிகைகளிலும் பயிரங்கமாகப் பேசியும், எழுதியும் வருகின்றார்கள்.

இவற்றை சகல பத்திரிகைகளிலுங் காணலாம். இவ்வகையாய்ப் பணஞ்சேகரிக்கும் காலத்தில் மட்டும் சாதிபேதம் கிடையாது என்று கூறி வசூல் செய்கின்றவர்கள் அத்தொகையைக் கொண்டு ஜப்பான், அமேரிக்கா முதலிய தேசங்களுக்கு வித்தை கற்கும்படி சிறுவர்களை அனுப்புங்கால் சாதிபேதமில்லாமல் சகலசாதி சிறுவர்களையும் அனுப்புகின்றார்களா.

இவர்கள் ஆரம்பித்துச் செய்யும் கைத்தொழிற்சாலைகளிலேனும் சகலசாதி பிள்ளைகளையும் வைத்து வித்தை கற்பிக்கின்றார்களா இல்லையே.

பணஞ்சேகரிக்கும் காலத்தில் மட்டும் சாதிகிடையாது. அப்பணத்தைச் சிலவிடுங்கால் சாதி உண்டென்பது ஓர் சுதேசியக் கூட்டமாகுமா. இவர்கள் செயலும் நிலைபெறுமா. இவர்கள் வித்தையும் விருத்தியடையுமா. இதன் பலன் தன்னவரன்னியரென்னும் பட்சபாதம் அற்றவர்களுக்கே விளங்கும்.

- 2:15; செப்டம்பர் 23, 1908 -

தன்னவர் அன்னியர் என்று எக்காலும் பிரிவினையால் தங்களை உயர்த்தியும் ஏனையோரைத் தாழ்த்தியும் சீவிக்கும் சுயப்பிரயோசனமுடையார்க்கு இதன் அந்தரார்த்தம் விளங்காது.

சில பெரியோர் தேசபிமானத்தால் கூட்டம் கூடுவதும், பத்திரிகைகளில் பேசுவதுமேயன்றி இராஜவிரோதம் கிடையாது என்று வெளிவந்திருக்கின்றார்கள்.

இராஜபிமானமற்றவர்களுக்கு தேசாபிமானம் உண்டு எனில் விவேகிகள் ஏற்பரோ. யதார்த்த தேசாபிமானிகளாயின் இராஜாங்கத்தோரை விரட்டித் துறத்திவிட்டு சுயராட்சியம் ஆளவேண்டும் என்னும் கூட்டங்கள் கூடுவரோ. பலவகை விரோதவாக்கியங்களைப் பத்திரிகைகளில் தீட்டுவரோ, இராஜாங்கத்தோர் செல்லும் பாதைகளில் வெடிகுண்டுகளைப் புதைத்து வீண்கலபை செய்வர்களோ. அத்தகைய வீணர்களை அரசாங்கத்தோர் பற்றி நீதி செலுத்துங்கால் அவர்களுக்கு உதவியாய்ப் பரிதாபக் கூட்டங்கள் கூடுவரோ, ஒருக்காலும் கூட்டமாட்டார்கள்.

எட்டினால் குடிமி எட்டாவிடில் பாதமென்னும் பழமொழிக்கிணங்க சுதேசிகளாகும் விவேகமிகுத்தோர் எத்தகைய மிதவாதம் கூறினும் அவற்றை செவிகளில் ஏற்காது அமிதவாதத்தையே ஆனந்தமாகக் கொண்டாடியதால் அரசாங்கத்தோர் முநிந்தளித்த அடியோடு தேசாந்திர சிட்சையும், ஐந்துவருட தேசாந்திரசிட்சையும், ஆறுவருட தேசாந்திர சிட்சையும் விளங்கியப்பின்னர்