பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அரசியல் / 99


அங்ஙனமின்றி சாதிபேதம் உள்ளவர்கள் கூடிக்கொண்டு சாதிபேதமில்லா ஏழைகளை ஈடேற்றப்போகின்றார்கள் என்பது இந்த கலியுலகத்திலுமில்லை, இனிவருங் கலியுலகத்திலும் இல்லை என்பது திண்ணமாம்.

சென்றவாரம் இக்கூட்டத்தோரைப் பற்றி வரைந்திருந்தோம். அதாவது, விவேகக் குறைவால் தாழ்ந்துள்ள வகுப்பாரொருவரும் சாதித் தலைவர்களாலும், அவர்களின் அடியார்களாலும் விரோதச்சிந்தையால் தாழ்த்திக் கொண்டே வருவதினால் தாழ்ந்துள்ள வகுப்பார் ஒருவரும் ஆக இரு வகுப்பாருள் இவர்களுள் சாதித்தலைவர்களால் தாழ்த்தப்பட்ட வகுப்பாரை சிலசாதித் தலைவர்கள் கூடி உயர்த்திவிடப் போகிறோமென வெளிவந்தது விந்தை என்றே கூறியுள்ளோம்.

அதற்குப் பகரமாய் ஜனவரிமீ 6உ புதவாரம் வெளிவந்த சுதேசமித்திரன் பத்திரிகையில் தாழ்ந்த வகுப்பாரை சீர்திருந்த ஏற்பட்டக் கூட்டத்தில் மேற்கண்டபடி வகுப்பை சீர்திருத்த மிஸ்டர் எம்.ஐ. நெல்லப்பா என்பவர் ஒருவர் வந்து தோன்றி பஞ்சமர்களுக்காய் பன்னிரண்டு சீர்திருத்த முறைகளை வாசித்ததாக குறித்திருக்கின்றது.

இவ்வகை ஓர் தாழ்த்தப்பட்ட வகுப்பாருக்காக ஓர் பிரதிநிதிவந்து அவர்களின் குறைவுகளை நிறைவு செய்யக் கேட்டுக் கொண்டபோது அவருக்கு உதவியாக ஆமோதித்துப் பேசினவர்கள் ஒருவரையும் காணோம். இவ்வகையாக அதே கூட்டத்தோரில் ஒருவர் வந்து பேசியபோது அவர் வார்த்தைகளை அமோதித்துப் பேச அன்பில்லாதவர்கள் தாழ்த்தப்பட்ட கூட்டத்தோரை உயர்த்துகிறோமென்று கூடியவை விந்தையிலும் விந்தையேயாம்.

இத்தகைய வீண் கூட்டங்களைக்கூட்டி அப்பிரயோசன வார்த்தைகளைப் பேசிவிட்டு அன்புடன் ஆதரிப்பவர்களையும் கெடுக்காமலிருக்கக் கோருகிறோம்.

- 2:31; சனவரி 13, 1909 -


38. சொல்லத்துலையா சாதிகளில் சுயராட்சியம் யாருக்காம்

கருணையும் கனமுத்தங்கி கண்ணிமைப்போல் நம்மை ஆதரிக்கும் பிரிட்டிஷ் ஆட்சியில் கனமும், மேன்மெயுந்தங்கிய இந்துதேச சக்கிரவர்த்தியார் ஏழாவது எட்வர்ட் அரசரவர்கள் தனது அன்புமிகுத்த அமுதவாக்கால் தனதாளுகையில் சருவசாதியோரையும் சமரசமாக பாதுகாப்போம் என்று அருளியதும்,

அவரது முதன்மந்திரியாக விளங்கும் மகாகனந்தங்கிய லார்ட் மார்லி அவர்கள் இந்துதேசக் குடிகள் யாவரும் பலசாதிப் பிரிவினைகளை ஏற்படுத்திக் கொண்டுள்ளவர்களாதலின் அவர்கள் ஏற்பாட்டிற்கு ஓர் குறைவும் நேரிடாமல் இராஜாங்கத்தோர் இயற்றியுள்ள ஆலோசனை சபைக்கு அந்தந்த சாதியோர்களுக்குத் தக்கவாறு பிரிதிநிதிகளை அனுப்பி சங்கத்தில் பேசலாம் என்று முடிவுசெய்திருக்கின்றார்.

இத்தேசத்தோர் சாதிபேதச் செயலுக்குத் தக்க சுயராட்சியம் இதுவேயாகும். இத்தேசத்துள் சிலர்கள் கூடி தங்களுக்கு சுயராட்சியம் வேண்டும் என்று கேட்டுக் கொண்டபடி சகல சாதியோரும் சேர்ந்து ஆளக்கூடிய சுயராட்சிய ஆளுகையைக் கொடுத்திருக்கின்றார்கள்.

அங்ஙனமிருக்க சில பத்திரிகைகளில் இந்து தேசத்தோராகிய நாங்கள் சுயராட்சியம் கேட்டிருக்க அவற்றை பிரிட்டிஷ் ராஜாங்கத்தோர் கவனியாது வேறுவேறு விஷயங்களை ஏற்படுத்தி விட்டார்கள் என்று தங்கள் மனம் போனபோக்கில் எழுதிவைத்திருக்கின்றார்கள்.

கன்னாடாதேசத்தார் ஒரே சாதியோராயிருந்துக் கொண்டு சுயராட்சியம் வினவியபோது யாதோர் ஆட்சேபனையுமின்றி கொடுத்து ஆதரித்து வருகின்றார்கள்.

நெட்டால் முதலிய சௌத் ஆபிரிக்கா வாசிகள் பேதமற்ற ஒரேசாதியோரா இருந்தது கொண்டு அவர்களுக்கு வேண்டிய ஆட்சியைக் கேட்டுக்