பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

128 / அயோத்திதாசர் சிந்தனைகள்


சண்முகமென்பது அறுமுகத்தையும் சண்மதமென்பது அறு சமயத்தையும் குறிப்பதுபோல் சண் ஆளமென்பது அறுவகைத் தொழிலைக் குறிப்பதாகும்.

மேன்மக்களாம் சண் ஆளர்களை சண்டாளர்களென்று இழிவுபடக் கூறிவருங்கால் விவேகிகளால் அவற்றைக் கண்டித்து பாலிபாஷையில் எழுதியுள்ள வசலசூத்திரம் :

கோபமுள்ளோனும், வஞ்சகனும், தப்பபிப்பிராயங்கொண்டவனும், பேதைகளை ஏமாற்றுபவனுமாய் உள்ளவன் எவனோ அவனே சண்டாளன்.

சீவயிம்சைகளைச் செய்வோனும், சீவர்கள் பேரில் அன்பில்லாதவன் எவனோ அவனே சண்டாளன்.

எவனொருவன் பட்டினங்களையும், கிராமங்களையும் கொள்ளையடித்து துன்பம் விளைவிக்கின்றானோ அவனே சண்டாளன்.

எவனொருவன் கிராமத்திலோ, காட்டிலோ, எவ்விடத்தும் தனதல்லாத ஏனையோர் பொருளை அபகரிக்கின்றானோ அவனே சண்டாளன்.

எவனொருவன் கடன் வாங்கி கேட்டபோது இல்லையென்று மறுதலிக்கின்றானோ அவனே சண்டாளன்.

சிறுபொருட்களின்பேரில் ஆசைவைத்து வழிபோக்கனைக் கொலைச் செய்து அப்பொருளை அபகரிப்பவன் எவனோ அவனே சண்டாளன்.

எவனொருவன் தனக்காகவேனும், ஏனையோர்க்காகவேனும் பொய்சாட்சி சொல்லுகின்றானோ அவனே சண்டாளன்.

என்றும் இருபது கீதைகளால் மிலைச்சராம் ஆரியர்களின் செயல்களாகும் பொல்லாங்கென்பவை யாவையுமே சண்டாளமென்று கூறி அன்னூலுக்கு வசலசூத்திரமென்னும் பெயரும் கொடுத்து விவேகிகளால் அவற்றைக் கண்டித்தும் வந்தார்கள்.

தென்னாட்டு திராவிட பௌத்தர்களை தீயரென்றும், பறையரென்றுந் தாழ்த்திய விவரம்

மிலைச்சராம் ஆரியர்கள் அரசர்களையும், பெருங்குடிகளையும் வயப்படுத்திக் கொண்டு இந்திர வியாரங்களைப் பற்றிக்கொண்டும், சங்கத்தோர்களை பலவகைத் துன்பஞ்செய்து ஓட்டியும், தன்மங்களை மாறுபடுத்திக் கொண்டும் வருங்கால் கலை நூல் வல்ல சங்கத்தோர்களுக்கும், கணிதவல்ல சாக்கையர், வள்ளுவர்களுக்கும், வித்துவ வல்லபாணர்களுக்கும் மனத்தாங்கலுண்டாகி இம்மிலைச்சர்களாம் ஆரியர்களை கிராமங்களுக்குள் வரவிடாமல் துரத்தியும் அவர்கள் அடிவைத்தயிடங்களிலெல்லாம் சாணத்தைக் கரைத்துத் தெளித்து அச்சட்டியையும் அவர்கள் ஓடிப்போன வழியில் உடைத்தும் வருவது வழக்கமாயிருந்தது.

இவ்வகையால் விவேகமிகுத்த சமணர்களும், சாக்கையர், வள்ளுவர்களும், பாணர்களுமாகிய திராவிடபௌத்தர்கள் யாவரும் வேஷபிராமணர்கட்டுக்குள் அடங்காமல் பராயர்களாகவேயிருந்துக் கொண்டு, மிலைச்சராம் ஆரியர்களின் வஞ்சகச் செய்கைகளைப் பறைந்துகொண்டே வந்தபடியால் மலையாளுவாசிகளாகுங் கொடுந்தமிழ் பௌத்தர்களை தீயர் தீயர்களென்றும், செந்தமிழ் பௌத்தர்களை பறையர் பறையர்களென்றும் வகுத்து வழங்கிவந்தவற்றுள் திராவிடபௌத்தர்களை மிலைச்சராம் ஆரியர்கள் கண்டவுடன் அவர்களடிக்கும் சாண நீருக்கு பயந்து ஓடுவது வழக்கமாயிருந்தது. அச்சமயம் இவர்களைக் கண்டோர்கள் அவர்களைக்கண்டு ஏன் ஓடுகிறீர்கள் என்றால் அவர்கள் தீயர்கள், பறையர்கள், தாழ்ந்த சாதியார் அவர்களைத் தீண்டலாகாது என்று சொல்லிக் கொண்டே ஓடிப்போவது மிலைச்சர்களின் வழக்கமாயிருந்தது.

- 2:30; சனவரி 6, 1909 -