பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அரசியல் / 137


வந்தவுடன் தங்கள் மதக் கோவிலுக்குட் சென்று தேங்காய், பழத்துடன் தட்சணை அளித்துவிட்டு வீட்டிற்கு வருவானாயின் சாதியும் கெடவில்லை, சமயமும் கெடவில்லை என்று வீட்டில் சேர்த்துக் கொண்டு சகல குடும்பத்தோரும் பேதமின்றி வாழ்வார்கள்.

சிவனைத் தொழுவதை நீங்கி கிறீஸ்துவைத் தொழலானான், விஷ்ணுவைத் தொழுவதை நீங்கி கிறீஸ்துவைத் தொழலானான் என்றவுடன் பறையனாகி விட்டான் என்று இழிவுகூறும் குரோதத்தால் சாதிகளுக்கு ஆதாரமாக சமயங்களையும், சமயங்களுக்கு ஆதாரமாக சாதிகளையும் வகுத்துக் கொண்டு மற்றவர்களைத் தாழ்த்தியும் குறைகூறியும் வருகின்றார்கள்.

திராவிடபௌத்தர்களுக்கு வலங்கையரென்னும் பெயர் வாய்த்த விவரம்

1814-வது வருடத்தில் விஸ்வபிரம வம்மிஷத்தாரெனும் கம்மாளருக்கும், பிராமணரென வழங்கும் விப்பிராளுக்கும் விவாக சம்மந்தவிஷயமாய் வியாஜியங்கள் நேரிட்டு மாஜிஸ்டிரேட்டு கோர்ட்டிலும், சித்தூர்ஜில்லா அதவுலத் கோர்ட்டிலும், கம்மாளர்களே ஜெயமடைந்துவிட்டபடியால் இப்பிராளென்னும் பிராமணர்களென்னப்பட்டவர்கள் சகலசாதியோரையும் தங்கள் வசப்படுத்திக் கொண்டதுபோக கம்மாளர்களுடன் சண்டை சச்சரவுசெய்து தங்களைக் காப்பதற்கு தங்களால் பறையரென்று தாழ்த்தி வந்த சாதியோரை சினேகப்படுத்திக் கொண்டு அவர்களைக் கிஞ்சித்து உயர்த்திவைத்தார்கள்.

அதாவது நாற்பது வருடங்களுக்குமுன்பு பஞ்சாயத்துக் கூடுவோர் தேசாயச்செட்டி பஞ்சாயத்தென்று வகுத்துவைத்திருந்தவற்றுள், சுங்கச்சாவடியண்டையிருந்து கங்கம் அல்லது ஆயம் வாங்குவோர்களுக்கு தேச ஆயச் செட்டியென்று கூறப்படும் அவர்களிடம் பஞ்சாயத்து செய்யப்போகிறவர்கள் மீனாட்சியம்மன் முத்திரையையும், மணியையும் மத்தியில் வைத்து அதன் வலங்கைபுரமாக பிராமணர்கள், வேளாளர்கள், பறையர்கள் வீற்றிருக்கலாமென்றும், அதன் இடங்கைபுரமாக கோமுட்டியர், சக்கிலியர், கம்மாளர்கள் வீற்றிருக்கலாம் என்றும் ஓர் நூதன ஏற்பாட்டைச் செய்து காரைக்கால், புதுச்சேரி முதலிய தேசங்களிலுள்ள பெளத்தக் குடிகளை கம்மாளர் அடிதடிக்கு பயந்து வலங்கைசாதியார் வலங்கை சாதியாரென சிறப்பில் வைத்திருந்தார்கள்.

என்ன உயர்த்தி வைத்திருந்தபோதிலும் அவர்களுக்கு கம்மாளர்களால் ஆபத்து நேரிடுங்காலத்தில் வலங்கையர்களும்,

வலங்கை சாதியென்போர் முன்னுக்கு வர ஏற்படுங்கால் பழயப் பறையர்கள் என்றே தாழ்த்தப்படுவார்கள். இஃது நாளதுவரையில் நிறைவேறிவரும் அநுபவங்களாகும்.

இன்னும் இக்குலத்தோருக்கு உற்சாகம் உண்டாக்கித் தாங்கள் கோவில்களுக்கு வலுதேடிக் கொள்ளுவதற்கும், கம்மாளர்களைத் தாழ்த்தி வைப்பதற்கும், சிவன்கோவிலில் பறையனென்னும் ஓர் அடியான் இருக்கின்றான் என்றும், விஷ்ணு கோவிலில் பறையனென்னும் ஓர் அடியானிருக்கின்றான் என்றும் பொய்க்கதைகளால் இவர்களை உற்சாகப்படுத்தி வைத்துக் கொண்டு தற்காலந் தங்களுக்கு எதிரிகளாகத் தோன்றிய கம்மாளர்களுக்குள் ஓரடியாரையுஞ் சேர்க்காமல் தொழுதுவருகிறார்கள்.

திராவிட பௌத்தர்களுக்கு வலங்கையரென்னும் பெயர் விப்பிராளென்னும் பிராமணர்கள் கம்மாளர்கள் அடிதடிக்கு பயந்து மீனாட்சி முத்திரையின் வலபுரம் நிறுத்தி பறையனென்னும் பெயரை தாட்சண்ணியத்தினால் அகற்றி, முத்திரைக்கு வலங்கையிலிருந்தபடியால் வலங்கைசாதியோர்கள் என வகுத்து நாளதுவரையில் புதுச்சேரிக், காரைக்கால் முதலிய இடங்களில் வழங்கிவருகின்றார்கள்.

- 2:37; பிப்ரவரி 24, 1909 -