பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அரசியல் / 147


புத்தகங்களும் வெளியிட்டிருக்கின்றார்கள். நாளதுவரையிலும் வெளியிட்டும் வருகின்றார்கள்.

இத்தியாதி பூர்வபௌத்த வம்மிஷ வரிசையோர் பெயர்களினாதாரங்களையும், செயல்களினாதாரங்களையும், சாஸ்திர ஆதாரங்களையும், சாஸ்திரிகளின் ஆதாரங்களையும் தற்காலம் யாம் ரூபிப்பதற்கும், வெளியிடுவதற்கும் எமக்காதாரம் யாதென்பீரேல், கனந்தங்கிய பிரிட்டிஷ் ராஜரீகமேயாகும்.

எவ்வகையிலென்பீரேல் - வேஷபிராமணர்கள் தங்கள் வயிற்று சீவனத்திற்காக ஏற்படுத்திக்கொண்ட நூதனங்களையும், சாதிகளையும், பரவச் செய்வதற்காய் சத்திய தன்மங்களாம் பௌத்தசாஸ்திரங்களை அழித்து பெளத்தர்களையும் தாழ்ந்த சாதி பறையர்களென்று அழித்து வசியிலும், கற்காணங்களிலும், கழுவிலும் வதைத்துக் கொன்றுவந்த அநுபவக்காட்சிகளை கர்னல் ஆல்காட் துரையவர்கள் எழுதியுள்ள (பூவர்பறையா) என்னும் புத்தகத்தில் பரக்கக் காணலாம்.

அத்தகையக் கொரூரத் துன்பங்களை வேஷப்பிராமணர்கள் இது வரையில் செய்துக்கொண்டும், பறையர்களென்னும் பூர்வபௌத்தர்கள் அவற்றை இதுவரையில் அநுபவித்தும் வந்திருப்பார்களாயின் இவர்கள் தேகங்கிடந்த இடங்களில் எலும்புங் காணாமற்போயிருக்குமென்பது சத்தியமாம்.

இத்தகைய கொரூர்காலத்தில் பூர்வபுண்ணிய வசத்தால் பிரிட்டிஷ் துரைத்தனம் வந்து தோன்றி சத்துருக்களின் கொரூரம் ஒடுங்கி இக்குலத்தோர் கிஞ்சித்து சீர்பெறவும் தங்கடங்கட் கையிருப்பின் சாஸ்திரங்கள் வெளிவரவும் அவைகள் யாவையும் முப்பது வருட காலமாக தேறவிசாரித்து நாங்கள் பூர்வ பெளத்தர்களே என்று வெளியேறவுஞ் செய்தது பிரிட்டிஷ் துரைத்தனத்தின் நீதிநெறி அமைந்த செங்கோலே ஆதலின் எமக்காதாரம் பிரிட்டிஷ் ஆட்சியேயென்று துணிந்துங் கூறியுள்ளோம்.

- 2:45; ஏப்ரல் 21, 1909 -

வேஷப்பிராமணர்கள் இந்தியாவில் தோன்றிய காலவரை

நாளது வரையில் தமிழ் பாஷைக்கு மூலாதாரமாக விளங்குங் கருவிகளாகிய ஆத்திச்சுவடி, கொன்றைவேந்தன், மூதுரை, குறள், நீதிவெண்பா, விவேகசிந்தாமணி மற்றுமுள்ள கலை நூற்கள் யாவும் பறையர்களென்று தாழ்த்தப்பட்டுள்ள பூர்வபௌத்தர்களே இயற்றியுள்ளாரென்பது அநுபவக் காட்சியேயாம்.

இத்தகையவித்தையிலும், புத்தியிலும், ஈகையிலும், சன்மார்க்கத்திலும் கீர்த்தி மிகுத்திருந்த பௌத்தர்களை பறையர்கள், பறையர்களென்றும், தாழ்ந்த சாதியோர், தாழ்ந்த சாதியோரென்றும் சீர்கெடுத்த காலத்தையும்,

மிலேச்சர்களாகிய ஆரியர்கள் பிராமணர், பிராமணரென்று வேஷமிட்டுக் கொண்டு உயர்ந்த சாதியோர் உயர்ந்த சாதியோரென்று சீர்பெற்ற காலத்தையும் ஆராய்வோமாக.

மகட பாஷையில் அறஹத்தென்றும். சகட பாஷையில் பிராமணரென்றும், திராவிட பாஷையில் அந்தணரென்றும் அழைக்கப் பெற்றபெயர் ஆதியில் புத்த பிரானொருவருக்கே உரியதாயிருந்தது. அது கண்டு சீவக சிந்தாமணியில் “ஆதிகாலத்து அந்தணன் காதன் மாகனொத்தா”னென்றும் காக்கை பாடியத்தில் “ஆதிகாலத்தந்தணனறவோ னென்றும்” புத்த சங்கவடியார்கள் அந்தண நிலையடைந்து அறஹத்துக்களான காலத்தில் புத்தபிரானை சீவகசிந்தாமணியில் அந்தணர்கள் தாதையென்றும் வரைந்திருக்கிறார்கள்.

பெண்ணாசை, மண்ணாசை, பொன்னாசை என்னும் மூன்றையும் ஒழித்து இந்திரர்களாய் சருவவுயிர்களை உந்தன் உயிர்போல் ஆதரிக்கும் தன்மகுணமாம் சாந்தம் நிறைந்தவர்கள் எத்தேச, எப்பாஷை எச்சாதி எச்சமயத்தோர்களாயிருப்பினும் பௌத்த தன்மகாலத்தில் அந்தணர்களென்றும், பிராமணர்களென்றும் அழைத்து வந்தார்கள்.