பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

xxxii / அயோத்திதாசர் சிந்தனைகள்

பறையர்களுக்கான உபகாரங்களும் யோசிக்க” கூட்டப்பட்ட கூட்டத்தின் போக்கிலிருந்து என்ன நடக்கும், எப்படி நடக்கும் என்பதை அயோத்திதாசர் விளக்கிவிட்டார்.

அவர் பிராமணர் பிராமணரல்லாதார் என்ற இரு சாராரையும் ஒப்பிட்டே பேசுகிறார். இரு வகுப்பினரும் தீண்டாமையை, சாதியை - தீவிரமாகக் கடைப்பிடிப்பவர்களே என்பதையும் அழுத்தமாகக் கூறுகிறார். பிராமணர் மேலாண்மையைப் பிராமணரல்லாதார் வெறுக்கிறார்கள், பிராமணர் பிராமணரல்லாதார் ஆதிக்கத்தைத் தாழ்த்தப்பட்ட தீண்டாதவர்கள் விரும்பவில்லை என்பதையும் அயோத்திதாசர் மிகவும் தெளிவாகவும் அழுத்தமாகவும் எடுத்துக் கூறுகிறார்.

தண்டனையடைந்த குற்றவாளிகளுக்குத் தரும் தண்டனைகள் கூட மேல்சாதிக்கு ஒரு விதமாகவும் கீழ்சாதிக்கு வேறு விதமாகவும் அளிக்கப்படுவதையும் கூறுகிறார்.

“உயர்ந்த சாதி என்று சொல்லிக் கொள்வோர்கள் தங்களுக்கு எதிரிகளாகவும், விரோதிகளாகவும் உள்ளோர்களை தாழ்ந்த சாதியென்று வகுத்து நிலைகுலையச் செய்து வந்தனர். 1876ஆம் (183 ஆண்டுகளுக்கு முன்பு) வருஷத்தில் தாழ்ந்த சாதி என்போருக்கு தொழுக்கட்டை தண்டனையும் உயர்ந்த சாதியார் என்போர்க்கு சாதாரணக் காவல் தண்டனையும் உண்டாக்கிக் குடிகளை பலதேசங்களுக்கு சிதறி ஓடிப்போகும்படி செய்துவிட்டார்கள், விக்டோரியா ஆட்சியில்... தாழ்ந்த சாதி உயர்ந்த சாதி என்னும் வரம்பின்றி குரூரச் செய்கையுள்ளவனை தொழுக்கட்டையில் போடலாம் என்று மாற்றிவிட்டார்கள். பொறாமையினால் சிலரைத் தாழ்ந்த சாதி என்றும் சோம்பேறிகளாய் வயிறு வளர்ப்பதற்குப் பெரிய சாதிகள் என்றும் ஏற்படுத்திக்கொண்டார்களேயன்றி எதார்த்தத்தில் உயர்ந்த சாதி தாழ்ந்த சாதி கிடையாது.”(தமிழன் -15.4.1908)

“கிராமங்களிலும், தாலுக்காக்களிலும் உள்ள கோர்ட்டுகளில் தாழ்ந்த சாதி என்போர்கள் உள்ளே நுழையவும் கூடாது, அருகில் வரவும் கூடாது. தூர நின்று கொண்டு அவன் பிராதை (வழக்கை) எவனாவது கேட்டுச் சொல்ல அவன் தீர்ப்படைவது நியாயமோ...” (தமிழன்-7.11.1914) என்று வழக்கு மன்றத்திற்குள் போகாமலேயே வழங்கப்படுகிற தீர்ப்பை ஏற்றுக்கொள்ளுகிற கொடுமை தமிழகத்தில் மட்டுமே காணலாம் என்று கூறுகிறார். இத்தகைய நிலைமையில் இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுத்துவிட்டால் கொடுமையாளர்களின் ஆட்சி கொடுங்கோலாட்சியாகத்தான் இருக்கும் என்று கருதுகிறார். மேலும், தாழ்த்தப்பட்டோர்கள் கல்வி கற்று அறிவைப் பெற்றுவிடக் கூடாது என்பதில் உயர்த்தப்பட்டோர் மிகக் கவனமாக இருப்பதையும் சுட்டிக் காட்டுகிறார்.

26.1.1908இல் சுதேசமித்திரன் பத்திரிகையில் ‘ஐயோ அநியாயம் அநியாயம்’ என்று ஓர் கடிதம் எழுதப்பட்டிருந்தது. அதில் ‘இழிந்தோர் பலர் கல்விக் கற்றுக் கொண்டு இந்தியாவின் சாதி வித்தியாசத்தைப் பற்றியும், உயர் குலத்தோரைப் பற்றியும் மற்றும் பெரியோர்களைப் பற்றியும் வாயில் வந்தபடி பேசுவதுமாகயிருக்கிறார்கள்’ என்று எழுதியிருந்தது...

இந்தியாவில் இருக்கும் பூர்வக்குடிகளும் விவேகம் மிகுந்தவர்களும் முயற்சியில் தளராதவர்களும், பூமிகளை பண்படுத்த வல்லவர்களுமாகியவர்களை ...தாழ்த்தி ராஜாங்க உத்தியோகங்களில் சேர விடாமலும் செய்துவரும் கொடூரங்களைக் கேட்பதற்கு நியாயம் இல்லாமல் போனதென்ன? (தமிழன் - 4.3.1908) என்று கேட்பதில் பயனில்லை என்பதை அயோத்திதாசர் அறிவார். எனினும் மனிதர் திருந்தக்கூடியவர்களாயிற்றே, என்றாவது திருந்தமாட்டார்களா என்றும் எதிர்பார்த்தார். எதிர்பார்ப்பே தவிர நம்பிக்கை இல்லை. ஏனெனில் ஓநாயிடமிருந்து ஆட்டுக்குட்டி அன்பை எதிர்பார்ப்பதில் பயனில்லை என்பதை அவர் அறிந்திருந்தார். தாழ்த்தப்பட்ட தீண்டாத மக்களை பயமுறுத்தி எப்படியெல்லாம் உயர்த்தப்பட்ட மக்கள் பணிய வைக்கிறார்கள் என்பதை ஒரு நிகழ்ச்சியின் மூலம் அயோத்திதாசர் விளக்குகிறார்: