பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/407

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரசியல் / 359


சு. இத்தகையக் கேடுண்ணும் நிலையென்று கூறியுள்ளவற்றை விவரிக்க வேண்டுகிறேன்.

ப. பெளத்த அரசர்களும், பௌத்தக் குடிகளும் இந்தியதேச முழுவதும் நிறைந்திருந்த காலத்தில் அவர்களால் அநுசரித்துவந்த வித்தை, புத்தி, ஈகை, சன்மார்க்க மென்னும் சிறந்த செயல்களற்று பின்னர் தோன்றிய வேஷப் பிராமணர்களால் தங்களது சுயப்பிரயோசனங்களுக்கென்று ஏற்படுத்திக் கொண்ட சாதிபேதச் செயலும் சமயபேதச் செயலுமே இத்தேசத்தைக் கேடடையச்செய்ததாகும்.

சு. சாதிபேதச் செயலாலும், சமயபேதச் செயலாலும் தேசம் எவ்வகையாற் கேடடைந்துபோம்.

ப. சாதிபேதச்செயலும், சமயபேதச் செயலும் பொய்யாயக் கட்டுக்கதைகளாதலின் விவேகிகள் யாவரும் அவைகளை அருவறுப்பதோர் விரோதம். கீழ்ச்சாதி மேற்சாதியென்று மனிதவகுப்போரே மனிதவகுப்போரைத் தாழ்த்திவருவதோர் விரோதம். பெண் கொடுக்கல் வாங்கலில்லாததோர் விரோதம். ஒருவர்வீட்டில் ஒருவர் புசிப்பெடுக்காததோர் விரோதம் சாதிபேதப் பொறாமெய்ச்செயலால் தூஷித்துக்கொள்ளுவதோர் விரோதம்.

சாதி வித்தியாசப் பொய்க் கட்டுப்பாட்டினால் இத்தியாதி விரோதக் கிளைகள் விரிந்து வளர்ந்ததுடன் சமய பேதங்களினால் தங்களுக்குத் தாங்களே தாற்பரியம் அறியாது ஏற்படுத்திக்கொண்டவேதாந்தமே பெரிதென்று விசாரணையற்ற வாதுபுரிவதொன்று. விஷ்ணுவுக்கே பரத்துவம் சிவனுக்குப் பரத்துவமில்லை, சிவனுக்கே பரத்துவம் விஷ்ணுவுக்கு பரத்துவமில்லையென்று தங்களுக்குத்தாங்களே ஏற்படுத்திக் கொண்ட சாமிகளுக்கு தாங்களே பரத்துவங்கொடுத்து தாங்களே புகழ்ந்துக்கொள்ளுவதோர் விரோதம். பணம் சம்பாதிப்பதற்கு எங்கள் குருவேதான் ஜகத்குரு, மற்ற குருக்கள் எல்லாம் ஜகத்குருவல்லவென்பதோர் விரோதம். எங்கள் சாமிபெயராலேயே உண்டிகட்டவேண்டும், மற்ற சாமிகள் பெயரால் உண்டிகட்டலாகாது என்பதோர் விரோதம்.

இத்தியாதி சாதிவிரோதத்தினாலும், சமயவிரோதத்தினாலும் ஒருவருக்கொருவர் முகத்திருப்புண்டாகி, பூர்வத்திலிருந்த வித்தை புத்தி, ஈகை, சன்மார்க்கமாகியச் செயல்கள் யாவு மற்று சோம்பலென்னுந் தடிப்பேறி, வஞ்சினமென்னுங்கூடுகட்டி, பொறாமெய்ப் பொச்செறிப்பென்னும் மூடியிட்டும், சாதி சமயப் போராட்ட துவஜமிட்டு, பொய்க்குருக்களாகிய வேஷப்பிராமணர்கள் எக்குடி கெடினும் தங்கள்குடி சுகம் பெற்றால் போதுமென்றெண்ணி சுயப்பிரயோசனத்தை நாடிநிற்கவும் ஆடுகள் கசாயிக்காரனைப் பின்பற்றி செல்லுவது போலப் பொய்க்குருக்களைப் பேதைக் குடிகள் பின்பற்றி செல்லவுமாகியச் செயல்களால் சாதிகளே சீர்கொடுக்கும், சாமிகளே சோறு கொடுக்குமென்னும் அஞ்ஞானத்தால் மக்களின் வித்தை, புத்தி, ஈகை, சன்மார்க்கமற்று சீருங்கெட்டு தேச்சிறப்பும் அழிந்து பாழடைந்து போமென்பதாம்.

சு. சாதிபேதத்தாலும் சமயபேதத்தாலுமே இத்தேசம் பாழடைந்துப் போயிற்றோ.

ப. இன்னும் சிலகாலமட்.டி-லும் இப்பிரிட்டிஷ் துரைத்தனத்தார் இவ்விடம் வந்து குடியேறாம லிருப்பார்களாயின் மக்கள் சீர்குலைந்து சிறப்பழிவதும், தேசம் நாகரீகம் குன்றி பாழ்படுவதும் பட்டம் பகல் போல் பரக்க விளங்குமே.

சு. மக்களுக்கு சீர்குலைவும், தேசப் பாழும் எவ்வகையா லுண்டாமென்பதை விளக்கக் கோருகிறேன்.

(இதற்குப் பின் இக்கட்டுரை தொடரப்படவில்லையெனத் தெரிகிறது)

- 5:7; சூலை 25, 1911 -