பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/421

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரசியல் / 373

வானக்காச்சலால் பூமிக்காச்சலுண்டாகி புற்பூண்டுகளும் விளைவதற்கு ஏதுவில்லாமல் போகின்றது.

இத்தகைய வஞ்ச நெஞ்சர்களால் விளையுங் கேட்டை நமது கருணைதங்கிய ராஜாங்கத்தோர் அறியாமல் இராஜாங்க பணங்களை ஏராளமாகச் செலவுசெய்து விவசாய பண்ணைகளையும் பரம்படிக்குங் இயந்திரங்களையும், உழுது பரம்படிக்குங் கருவிகளையும், அதனதன் தொழில்களை சீர்பெறச் செய்துகாட்டும் சிப்பந்திகளையும் விதை முதலுக்காய தானியங்களையுந் தருவித்து வைத்துக்கொண்டு பத்திரிகைகளின் மூலமாகவும், பஞ்சாங்கங்களின் மூலமாகவும் பலதடவைகளில் வெளியிட்டு வந்தும் இராஜாங்கத்தோர் விவசாய உதவிகளையும் அவர்கள் போதனைகளையும் நோக்காது தங்கள் தங்கள் வஞ்சகக் கூற்றிலேயே காலத்தைக் கழித்து வருகின்றார்கள். பூர்வக் குடிகளாகிய வேளாளர்கள் பூமிகளை சொந்தத்தில் பெற்று இராஜாங்கத்தோர் விவசாய உதவிகொண்டு முன்னேறும்படி எத்தனித்தாலோ அவர்களுக்கு பூமி கிடைக்கவிடாத எத்தனங்களையே, செய்துவிடுகின்றார்கள். அவர்களேனுந் தங்களுக்குள்ள பூமிகளை இராஜாங்கத்தோர் விவசாய உதவிகொண்டு விருத்திசெய்து தானியப்பெருக்கம் அடையச்செய்கின்றார்களா அதுவுங் கிடையாது. பூமிகளிருந்தும் இராஜாங்கத்தோர் விவசாய உதவியைக்கொண்டேனும் தங்களது செலவின் முயற்சியைக் கொண்டேனுந் தானியவிருத்தி செய்யாது ஒருநாள் முழுவதும் உழைக்கும் முக்காலணா ஆள் கிடைப்பானா அரை அணா ஆள் கிடைப்பானா என்னும் ஏழை மக்களைத் தேடி தங்கள் சுயவிருத்தியில் நின்று ஊழியர்களை எலும்புந் தோலுமாக்கிக் கொல்லும்வழி தேடுவார்கள். தங்களை ஒத்த மனித வகுப்போர்களையே கருணையின்றி வதைத்துத் தங்கள் சுயப்பிரயோசனத்தை நாடுவோர் ஆடுமாடுகளின் மீது இதக்கம் வைத்துக்காப்பார்களோ அதுவுங்கிடையாது. இத்தகையக் கருணையற்ற விவசாயிகள் முன்பு கருணை நிறைந்த பிரிட்டிஷ் ஆட்சியார் செய்துவரும் விவசாயவிருத்தி உதவி பரவுமோ பரவாதோ என்பது விளங்கவில்லை.

ஜப்பான், சைனா, பர்ம்மா முதலிய தேசங்களில் சாதிபேதமென்னும் பொறாமெய் குணங்களற்று சமய பேதங்கள் என்னும் சண்டை சச்சரவுகளற்று தேகத்தை உழைத்துப் பாடுபடும் முயற்சியுள்ளவர்களாதலின் இராஜாங்கத்தோர் உதவியின்றியே பூமியை உழுது தானிய விருத்திச் செய்து பலதேசங்களுக்கும் படியளந்து வருகின்றார்கள், அம்மேறை களங்கமற்று உழைக்குங் குடிகளுக்கு பிரிட்டிஷ் ஆட்சியைப் போன்ற இராஜாங்க விவசாய உதவியும் இருக்குமாயின் அவர்களது தேசங்களிலுள்ள ஒருகுழி பூமியேனும் வெறுமனே விடமாட்டார்களென்பது திண்ணம்.

இத்தேசத்தோரோ உழுது பயிரிடும் உழைப்பாளிகளுக்கு பூமிகளைக் கொடுக்கவிடாது அண்டைபாத்தியம் அண்டைபாத்தியமென்னும் அந்நியாயப் போக்குகளைக் காட்டிக்கொண்டும், மேய்க்கால் பூமி மேய்க்கால் பூமியென ஏய்க்கும் வழிகளை உண்டு செய்துக்கொண்டும், எதிரிகளையும் பூமிகளையும் பாழ்படுத்தி வைப்பார்களன்றி மனமாற ஏழைகள் சீர்பெறவும் பூமிகள் விருத்தி பெறவும் சயிக்க மாட்டார்கள்.

இத்தகைய தேக உழைப்பற்ற வன்நெஞ்சர்கள் கருணை தங்கிய ராஜாங்கத்தோர் பொருளுதவியையும், போதனா உதவியையும் கொண்டு தங்கள் தங்கள் பூமிகளை சீர்திருத்துவார்களோ என்னும் சந்தேகமேயாம்.

கருணைதங்கிய இராஜாங்கத்தார் பூமிகளை சீர்திருத்த வேண்டிய முயற்சி செய்துக் கொண்டுவருகின்றார்கள். இத்தேசவிவசாயிகளோ எருமை மேல் மழைபெய்வதுபோல் ஏறப் பார்த்திருக்கின்றார்கள். தேகவுழைப்பின்றி பொருள் சம்பாதிப்போர் சிலரும், கைம்பெண்கள் சொத்துக்களின்மீது கண்ணோக்கம் வைத்திருப்போர் சிலரும், சாமிகடை வைத்து சம்பாதிப்போர் பலரும், ஒரு ரூபாயிற்கு இரண்டணா வட்டி வாங்கி ஓய்ந்திருப்பார் சிலரும், உங்கள் வீட்டிற்கு வந்தால் என்ன கொடுப்பீர்கள் எங்கள் வீட்டிற்கு வந்தால் என்ன