பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/438

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

390 / அயோத்திதாசர் சிந்தனைகள்

சாதியென்னும் நூதனசாதிப் பெயரைவகித்துக் கொண்டு சாதிபேதமில்லா வேளாளத் தொழிலாளர்களைத் தாழ்ந்த சாதியாகப் பிரிக்கவும் தங்களை மேலான சாதியென ஆரம்பித்துக்கொண்டதின் பேரில் பேதமின்றி தானிய முதலீவதும் அற்று பேதமின்றி தானிய முதலைப் பெறுவதும் அற்று விவசாய விருத்திக்கே கேடுண்டாயிற்று.

மனுதன்மசாஸ்திரத்தில் பயிரிடுந்தொழில் இழிந்த தொழிலென்று வரைந்துள்ள விவசாய விருத்திக்கு முதல் கேடும், வேளாளத் தொழிலாளருள் தானிய முதலீவோரெல்லாம் முதலியாரென்னும் வேறு சாதியாக பிரிந்துவிட்டது, விவசாய விருத்திக்கு இரண்டாங்கேடும், பூமியை உழுது பண்படுத்தி விடா முயற்சியில் தானியவிருத்திசெய்யும் உழைப்பாளிகள் யாவரையுந் தாழ்ந்த சாதிகளென வகுத்து சுத்த நீரை மொண்டுகுடிக்கவிடாமலும், அம்மட்டர்களை சவரஞ்செய்யவிடாமலும், வண்ணார்களை வஸ்திரமெடுக்க விடாமலும் பல வகையால் இழிவுகூறி நசித்துவந்த துன்பம் சகிக்கமுடியாது பூமித் தொழில்களைவிட்டு பலதேசங்களுக்குச் சென்று பிழைக்க ஆரம்பித்துக் கொண்டார்கள். இதுவே விவசாய விருத்திக்கு மூன்றாவது கேடாயிற்று.

- 5:30: சனவரி 3, 1912 -

இத்தகைய மூவகைக் கேடுகளுக்கும் உபபலமாக சோம்பேறிகளும், வஞ்சகர்களும், குடிக்கேடர்களும், பத்துக்குடிகள் நாசமடைந்தாலுமடையட்டுந் தங்களொருகுடிபிழைத்தால் போதுமென்னுங் கருணையற்ற லோபிகளுமானோர்களிற் சிலர் பூமிகளை சம்பாதித்துக்கொண்டார்கள்.

பூமிகளைக் கஷ்டமின்றி யெவ்வகையிற் சம்பாதித்துக்கொண்டார்களோ அதுபோல் தங்கள் பூமிகளை உழுது பண்படுத்துவதற்கும் நாளொன்றுக்கு முக்காலணாக் கூலி, வரணாக் கூலியாள் கிடைக்கவேண்டுமென்றும், அவ்வகை யாளுக்கு ஐந்து ரூபா கடன் கொடுத்துவிட்டால் தொகையைப் பெற்றவனது புத்திரன், பௌத்திரன் வரையில் அக்கடன் ஒழியாமலே கணக்கு சொல்லி வேலைவாங்கிக்கொண்டு வரவேண்டியதென்னுங் கோரிக்கையால் பூமியை நோக்கி நிற்கும் சில முதலாளிகளும் இருக்கின்றார்கள்.

அத்தகைய முதலாளிகளிடம் ஊழியஞ்செய்யும் வேளாளத் தொழிலாளர்கள் பசியாரக்குடிக்கக் கூழுமற்று கட்டத் துணியுமற்று எலும்புந்தோலுங் கோலுங் சூடுவையுமாயிருத்தல் வேண்டும். முதலாளிகள் பூமிகளில் இரவும் பகலும் உழைக்கவும் வேண்டும். இத்தகையவுழைப்பை சகிக்கலாகாது அன்னிய தேசங்களிலேனுஞ்சென்று பிழைக்கலாமென்று அனந்த உழைப்பாளிகள் இத்தேசத்தைவிட்டுப் போய்விட்டார்கள். இன்னும் அனந்தம்பேர் இவர்களது சாதிபேத அனாச்சாரக் கெட்டுப்போனச் செய்கையின் கொறூத்தால் பசியாற அன்னங்கிடைக்காவிடினும் சுத்தநீரையேனு மொண்டு குடிக்கயிடங்கிடையாது. பாசிநீரையுந் தூசிநீரையு மருந்தி பலவகை நோய்களாற் பீடிக்கப்பட்டு நசிந்து போனார்கள். பூமியைப் பண்படுத்தி தானியவிருத்திச் செய்யும் உழைப்பாளிகள் ஊரைவிட்டகன்றும் புசிப்பில்லாமல் மடிந்தும் போனவர்கள் நீங்க மற்றுமிருப்பவர்களையும் தங்களுக்குள்ள சாதிபேதச் செயலால் தலையெடுக்கவிடாமற் செய்துவருகின்ற படியால் கருணைதங்கிய ராஜாங்கத்தோரால் பூமிகளின் விருத்தியைநாடி வேணப் பொருளுதவிச்செய்தும் விவசாயத்தொழில்கள் விருத்திப்பெறாது கேடுற்றே வருகின்றது. இத்தகைய விவசாய விருத்திக் கேடுகளுக்கெல்லாம் காரணம் சாதிபேதமற்ற யேழைக்குடிகளுக்கு நேரிட்டுவரும் இடுக்கங்களேயாம். இவ்வேழைக்குடிகளின் இடுக்கங்கள் நீங்கவும், விவசாயங்கள் விருத்திபெறவும் வேண்டுமாயின் கருணைதங்கிய ராஜாங்கத்தார் தங்களது நன்னோக்கங்களை சாதிபேதமற்ற யேழைக்குடிகளின் மீது வைத்து வயிறாறப் புசிப்பூட்டி பூமியையுழுது பண்படுத்தவிடுவார்களாயின் சத்துருக்களின் இடுக்கங்கள் நீங்கி ஆனந்தத்துடன் பூமியை யுழுது பண்படுத்தி வேணவரையிலும் விவசாயத்தை விருத்திச் செய்வார்கள். அங்ஙனமின்றி யேழைமக்கள் தங்களுக்குச் சத்துருக்களாயுள்ள சாதிபேதம் வைத்துள்ளவரை யெஜமானர்களாகப்