பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/456

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

408 / அயோத்திதாசர் சிந்தனைகள்

பூசிப்பதோர் வித்தை, நாமம் போடுவதோர் வித்தை, நடுத்தெருவில் புறளுவதோர் வித்தை, பொட்டுமேல் பொட்டிடுவதோர் வித்தை, மொட்டைத்தலையிற் குட்டிக்கொள்ளுவதோர் வித்தை, மந்திரங்களென்று முணுமுணுப்பதோர் வித்தை, மாடுகளைச் சுட்டுத்தின்பதோர் வித்தை, கல்லுகளை சுற்றி சுற்றி வருவதோர் வித்தை, கைம்பெண்களை சத்தி பூஜை செய்வதோர் வித்தை, பன்றியினிறைச்சியைப் பொரித்துத் தின்றுப் பெரிய பூசை என்பதோர் வித்தை, மீனிறைச்சியை சமைத்துத்தின்றுவிட்டு மேலாய பஜனை செய்கின்றோமென்பதோர் வித்தை, காலை சாமியென்பதோர் வித்தை, கையை சாமியென்பதோர் வித்தை, சோம்பேறிகள் சேருதற்கு சத்திரங்கட்டுவதோர் வித்தை, சோற்றபிஷேகஞ் செய்வதோர்வித்தை, பகலில் சாமிக்கு வடை பாயசம் வட்டிக்க வேண்டுமென்பதோர் வித்தை, இரவில் சாமிக்கு சுக்கு நீர் கொடுத்து தூங்கவைப்பதோர் வித்தை, இத்தியாதி தடிச் சோம்பேறிவித்தைகளையே சாதித்து வருவதாயின் இந்தியதேசம் உள்ள சிறப்புங் கெடுவதுடன் இந்தியருக்கு உள்ள அறிவுங்கெட்டு பாழடைவார்களென்பது சத்தியம் சத்தியமேயாம்.

- 5:48; மே 8, 1912 -


255. சகலரும் படிப்பது விவேக விருத்திக்கா இராஜாங்க உத்தியோகத்திற்கா

தற்காலம் நமதுதேசத்துள் வாசிப்பவர் எல்லவரும் இராஜாங்க உத்தியோகத்தை நாடி வாசிக்கின்றார்களன்றி விவேகவிருத்தியை நாடி வாசிப்பதைக்காணோம். பெரும்பாலும் வாசித்தவர்கள் யாவரும் இராஜாங்க உத்தியோகம் பெறவேண்டுமென்னும் அவாக்கொண்டே அங்கங்கு பெருங்கூட்டங்களிட்டு அந்த சீர்திருத்தம் பேசவேண்டும். இந்த சீர்திருத்தம் பேசவேண்டுமென்பதும் அந்த உத்தியோகங்களைக் கொடுக்கவேண்டும் இந்த உத்தியோகங்களைக் கொடுக்க வேண்டுமெனக் கூச்சலிட்டு வருவதைப் பலப் பத்திரிகையால் அறிந்துவருகின்றோமன்றி வாசித்தவர்கள் எல்லவரும் ஒன்றுகூடி தங்கள் தங்கள் விவேகவிருத்தியால் அத்தகைத் தொழிலை விருத்தி செய்தார்கள். இந்த விவசாயத்தை விருத்திசெய்தார்களென்று ஓர் வதந்தியும் பிறந்தது கிடையாது, ஓர் பத்திரிகையில் வாசித்ததுங்கிடையாது. இதனால் நன்குவிளங்குவது யாதெனில், தற்காலம் வாசிப்போரெல்லவரும் இராஜாங்க உத்தியோகத்தை நாடி இராஜாங்கத்தையே செய்ய வேண்டியவர்களாக விளங்குகின்றது. எல்லவரும் பல்லக்கேற எத்தனித்துக் கொண்டால் எடுப்பவர்கள் யாரென்பதை ஆலோசிக்க வேண்டியதேயாம்.

இத்தகைய ஆலோசினையில் படிப்பதெல்லாங் கண்டுபடிக்கா படிப்பென்னிலோ அஃது படிப்பவர் குற்றமேயாகும். காரணம் படிக்கும்போதே இராஜாவாகிவிட வேண்டுமென்னும் எண்ணம் இருக்குமாயின் படிப்பவர் குற்றமாகும். ஆதலின் படிப்பவர் படிப்பு வித்தையிலும், ஈகையிலும், சன்மார்க்கத்திலும் நோக்குமாயின் வித்தியாவிருத்தி மேலும் மேலும் பெருகி கைத்தொழிற்சாலைகளும் அமைந்து கனமடையச் செய்யும். அங்ஙனம் படிக்கும் போதே வித்தியாவிருத்தியை நோக்காதபடியால் பழைய ஏற்றங்களுக்குமேல் வேறேற்றம் செய்ய விதியில்லை பழய கவலைக்குமேல் கவலையில்லாமல் இரைப்பதற்கு விதியில்லை. பழய சம்பாங்குடைக்குமேல் வேறு குடை செய்ய புத்தியில்லை. பழய எலிகத்திரிக்குமேல் வேறு கத்திரி செய்யும் படிப்பில்லை. ஆதியில் கண்டுபிடித்த தானியங்களைவிட வேறு தானியங் கண்டுபிடிக்க வழியில்லை, பழய கனி வர்க்கங்களுக்குமேல் வேறு கனிகளை விருத்தி செய்ய விதியில்லை. பழய தைலங்களைவிட வேறு தைலங்களைக் கண்டுபிடிக்குங் கலையில்லை.

இத்தகையக் கைத்தொழில் சீர்கேட்டிற்கும் வித்தியா குறைவிற்குக் காரணம் படிப்பவர்களின் கேடுபாடுகளேயாம். பிரிட்டிஷ் ஆட்சியின் துரை மக்கள் படிப்பின் விருத்தியைப்பாருங்கள் போட்டகிறாப்பிற்கு மேல் லெத்தகிறாப், லெத்தகிறாப்பிற்கு மேல் டெல்லகிறாப், டெல்லகிறாப்பிற்குமேல் ஒயர்லெஸ்