பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/481

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரசியல் / 433


இத்தேசத்தின் பூர்வசாதிபேதமற்ற நிலையைக்கருதி மக்களை மக்களாக பாவித்து வித்தியாவிருத்தியையும், விவசாயவிருத்தியையும், வியாபார விருத்தியையுஞ் சிந்தையிலூன்றி சோம்பலின்றி உழைத்து தேசத்தை சீர்பெறச்செய்ய முயல்பவர்கள் யாரோ அவர்களையே சுதேசிகளென்றும், சுயதேசத்தார்களென்றும், பூர்வக்குடிகளென்றுங் கூறத்தகும்.

மற்றய சாதிபேதச் செயலால் ஒற்றுமெயைக் கொடுப்போரும், சமயபேதச் செயலால் சோம்பலைப் பெருக்கி தேசத்தைக் கெடுப்போரும், சுதேசிகளாகமாட்டார்கள். அவர்கள் தங்கள் சுயநலத்தையே கருதும் அன்னிய தேசத்தோர்களே ஆவர், அவர்களுக்கு சுதேசிகளென்னும் பெயர் பொருந்தவே பொருந்தாவாம்.

சுயராட்சியம் என்பது யாதெனில் சுயதேசத்தோரும் பூர்வக்குடிகளுமாய மக்கள் தங்கள் தேசத்தை ஆளுவதற்குப் பெயர். அத்தகையப் பெயர் தற்கால இந்துக்கள் என்போருக்குப் பொருந்தவே பொருந்தாது. காரணம் இந்திய தேயத்திலுள்ள சிந்துநதி ஓரமாக வந்து குடியேறி இந்துக்கள் என்றழைக்கப்பெற்றோர் இந்திய தேசத்தின் நூதனக்குடிகளாதலின் அவர்களுக்கு சுதேசிகளென்னும் பெயரே கிடையாது. அவர்களுக்கும் அவர்களைச் சார்ந்தோருக்கும் சுயராட்சியத்தோர் என்னும் பெயரும் பொருந்தாது. அவர்களுக்கு சுயராட்சியத்தோர் ஆச்சுதே என்னும் ஆளுகையும் அளிக்கத்தகாது. இத்தேசத்தின் ஆளுகையைப் பெறுவதற்கும் அவர்களுக்கு சுதந்திரம் கிடையா.

கருணைதங்கிய பிரிட்டிஷ் துரைத்தனத்தார் தங்களாளுகையைச் சுதேசிகளின் மீது கிருபை பாவித்து சுயராட்சியத்தை யளிப்பதாயினும் இத்தேசப் பூர்வக் குடிகள் யார், யதார்த்த சுதேசிகள் யாரென கண்டுதெளிந்து அவர்களை சீர்திருத்தி அவர்கள் பால் அளிப்பதே கிருபையாகும். அங்ஙனமிராது நேற்று குடியேறிவந்தவர்களையும் முன்னானாள் குடியேறி வந்தவர்களையும் சுதேசிகளென்று கருதி அவர்கள் வசம் சுயராட்சிய ஆளுகையை ஒப்படைத்து விடுவார்களாயின் யாதார்த்த சுதேசிகள் யாவரும் பாழடைந்து போவதுடன் சுதேசமுங்கெட்டு சீரழிந்து போமென்பது சத்தியம்.

யதார்த்தமாய சுதேசக்குடிகளே, இவற்றை சற்று ஆழ்ந்து கவனித்தல் வேண்டும். வாசித்தவர்களுக்குள் ஐந்தாறு பேர் முனைந்து சுயராட்சியம் வேண்டும், சுயராட்சியம் வேண்டுமென சமயோசிதக் கூச்சலிட்டு வருகின்றார்கள். இந்தியதேச ஏழை மக்களின் இடுக்கண்களையும் அவர்கள் பட்டுவருங் கஷ்ட நஷ்டங்களையும் கண்ணினால் கண்டறியா இங்கிலாந்திலுள்ள சில துரைமக்களும் அவர்களுக்கு உபபலமாகப் பேசியும் வருகின்றார்கள். இத்தகையப் பேச்சுகளையுங் கூச்சல்களையுங் கேட்டறிவதற்குமுன் சுதேசிகள் என்பவருள் கவர்மென்றாரால் ஓர் கிராம அதிகாரங் கொடுத்து விடுவார்களாயின் அந்த சொற்ப அதிகாரத்தால் அக்கிராமக் குடிகளுக்கு சுகச்சீருண்டா அன்றேல் சுகக்கேடுண்டா. ஓர் கதேசிகள் என்னும் அதிகாரிகளிடங் குடிகள் சென்று ஏதோ உள்ள குறைகளை முறையிடுவாராயின் அவற்றை அன்புடன் கேட்டு நீதியளிக்கின்றார்களா அன்றேல் சீறிச்சினந்து விரட்டுகின்றார்களா. இத்தகைய சொற்ப அதிகாரங்களைக் கொடுத்து பிரிட்டிஷ் துரைத்தனத்தார் மேல்பார்வையிருக்கும் போதே தங்கள் சுயப்பிரயோசனத்தைக் கருதி குடிகளை சீரழிப்பவர்கள் சுயராட்சிய ஆளுகையைப் பெற்றுக்கொள்ளுவார்களாயின் தேசத்தையும் தேசமக்களையும் என்ன சீர்கெடுப்பார்களென்பது சொல்லாமலே விளங்கும்.

ஆதலின் நீதியும் நெறியுங் கருணையுமிகுத்த இப்பிரிட்டிஷ் ஆளுகையில் உள்ளக் குடிகளில் தோட்டி முதல் தொண்டான் வரையில் ஏதோ கிஞ்சித்து கல்விகற்றும் கைத்தொழில் கற்றும் சகலமக்களும் சொற்ப சுகச்சீரேனும் பெற்று மனிதர்களென தேசத்துலாவுகின்றார்கள். இத்தகைய சீர்திருத்த காலத்தில் பிரிட்டிஷ் துரைத்தனமென்பது மாறுபட்டு சுதேசிய துரைத்தனர் தோன்றுமாயின் சகல மக்களின் சுகச்சீர்களுங் கெட்டு பாழடைய வேண்டிவரும்.