பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/553

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரசியல் / 505

கோலுங் குடுவையுங் கொடுத்து கொல்லாமற் கொன்றுவருவதுடன் சுத்த நீருள்ள குளங்களிலும் கிணறுகளிலும் நீர்மொண்டு குடிக்கவிடாமல் அசுத்தமடைந்துள்ள ஓடை நீர்களையும் கட்டை நீர்களையும் மொண்டு குடிக்கச் செய்து பல வகை வியாதி உண்டாகக் கொல்லும் எண்ணங் கொண்டு கொன்றே வருகின்றார்கள்.

இத்தியாதி கஷ்டங்களை பொறுக்க முடியாது வேலையை விட்டு ஓடிப்போவதாயிருந்தாலும் வேலைக்கு வராமலிருந்தாலும் அதற்கென்ற ஓர் சட்டமேற்படுத்தி வைத்துக் கொண்டார்கள். தாழ்ந்த சாதியென்று வகுக்கப்பட்டவர்களை யாதொரு சுகாதாரமுமின்றி கொன்றுவருவதுடன் (தொழுவு) என்னும் இதக்கமற்ற ஓர் வகை விலங்கும் வைத்திருக்கின்றார்கள். அத்தொழுவிலோ சாதிவேஷக்காரர்கள் யாரோ அவர்களொரு வரையும் அதிற் போடக்கூடாது, தாழ்ந்த சாதிகளென்று வகுத்துள்ளோர்கள் யாரோ அவர்களை மட்டுமே அத்தொழுவில் மாட்டி வதைத்தல் வேண்டுமென்பதாம். அத்தொழுவென்பதோவென்னில் நீண்ட கட்டைகளில் நான்கு துவாரமிட்டு சொற்ப குற்றஞ் செய்த போதினும் இவனது இரண்டு காலை இரண்டு துவாரத்திலும், இரண்டு கையை இரண்டு துவாரத்திலும், மாட்டி பூட்டிட்டு வெய்யிலில் விட்டு விடுதே தண்டனையாம். அவனுக்கு வேர்வை வடிந்தாலுந் துடைக்கக் கையுதவி கிடையாது. ஈமொய்த்தாலும் ஓட்டமுடியாது. எறும்புகள் கடித்தாலும் துடைக்க முடியாது. கூவி அழைக்கவும் அருகில் ஒருவரும் கிடையாது. அவன் சொந்தக்காரர்கள் அவன் படும் உபத்திரவத்தை சயிக்க முடியாது அருகில் வந்துவிட்டாலோ அவர்களும் அத்தொழுவத்தில் மாட்டிக்கொள்ள வேண்டியதே. அந்தோ இத்தகைய தண்டனையை எத்தேசத்தேனுங் கண்டதுண்டோ, கேள்வியேனும் பட்டதுண்டோ.

இத்தகையக் கருணையற்றப் படும்பாவச் செயலாற் கொல்லாமற் கொல்லும்படியானப் படும்பாவிகளும் உலகத்திலுண்டோ. மனிதர்களுக்கு என்று நீதி வகுக்குஞ் சட்ட திட்டங்களில் உயர்ந்த சாதியோனுக்கோர் சட்டமும் தாழ்ந்த சாதியோனுக்கோர் சட்டமுமாகிய பேதமும் உண்டாமோ. இத்தியாதி சட்டங்களை ஏழைக்குடிகளடைந்து வரும் துன்பங்களையும் தற்கால சீர்திருத்தக்காரர்களும் பத்திராதிபர்களும் அறிந்ததில்லை செவியிலேனும் கேட்டதில்லையோ, எல்லாம் அறிந்தவர்களே யாவர். ஆயினும் தாழ்ந்த சாதியென்று வகுக்கப்பட்ட ஆறுகோடி மக்களும் அழிந்து நாசமாகிவிட வேண்டும், உயர்ந்த சாதி வேஷமிட்டுள்ளோர் யாவரும் சுகமுற்று வாழ்க வேண்டுமென்பதே அவர்கள் அபிபிராயமாகும். இவற்றிற்கு ஆதாரமாக தற்காலம் நடந்துள்ள பரிதாபமற்றச் செயலொன்றை விளக்குகின்றேன். அதாவது அவ்வருஷம் பெய்த மழையின் மிகுதியால் சிதம்பரத்தில் பெரும் வெள்ளமுண்டாகி அனந்தக் கிராமங்களை அடித்துக் கொண்டு போனவிஷயத்தில் பஞ்சமரென்னும் தாழ்ந்த வகுப்போர் வீடுகளே பெரும்பாலும் நஷ்டமடைந்ததுடன் அனந்தபேர் மரணமடைந்து போனவர்கள் போக மிகுதியுள்ளோர் இருக்க இடமின்றியும் குடிக்கக் கஞ்சின்றியும் பல கஷ்டங்களை அனுபவிப்பதாக விளங்குகின்றது. சில பத்திரிக்கைகளிலும் பஞ்சமர்கள் அதிகக் கஷ்டப்படுகின்றார்களென்றும் வரைந்திருக்கின்றார்கள். உள்ளுரில் இத்தியாதி கஷ்டப்படும் ஏழைகளைப்பற்றி எவரேனும் பரிதாபப்பட்டவர்களுண்டோ. எப்பத்திராதிபர்களாயினும் வெள்ளத்தால் நசிந்துள்ளோரை காக்கவேண்டுமென்று பரிதவித்து எழுதியதுண்டேடா. எப்புண்ணிய புருஷராயினும் ஸ்திரீகளாயினும் பண உதவி செய்து பஞ்சமர் என்போரை பாதுகாத்தது ஏதுங்கிடையாவே.

இந்திய தேசத்தின் கண்ணே பலவகையான துன்பங்களையும் சகிக்க முடியா கஷ்டங்களையும் அநுபவித்துவரும் ஆறு கோடி மக்களை கண்ணெடுத்துப் பாராமலும் அவர்கள் மீது கருணையென்பதே வையாமலும் வதைப்பவர்கள் செளத்தாப்பிரிக்காவில் கஷ்டப்படும் இலட்சத்துச்சில்லரைக் குடிகளுக்காகப்