பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/665

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமூகம் / 617

அதனால் அவர்கள் சுகமாக சீவித்துவருஞ் செயல் களையும் நாளுக்குநாள் கண்டு இவர்களும் அத்தகைய பிராமண வேஷத்தை ஆரம்பித்துக் கொண்டார்கள்.

சுதேசபாஷைக் குடிகள் பிராமணவேஷமிட்டுக் குடிகளை வஞ்சித்து சோம்பேறி சீவனஞ் செய்ய ஆரம்பித்துக்கொண்டதினால் மேலும் மேலும் கல்வியற்றக் குடிகள் அவர்கள் வார்த்தைகளை நம்புவதற்கும், அவர்கள் கேட்டுக்கொள்ளும் வண்ணம் நடந்துக்கொள்ளுவதற்கும் ஆரம்பித்தபோது வேஷப் பிராமணர்களின் கூட்டங்கள் நாளுக்கு நாள் பெருகிவரவும் அவர்கட் சொற்படி நடக்குங் கல்வியற்றக் குடிகளின் கூட்டம் அதனினும் பெருகவும் நேர்ந்து யதார்த்த பிராமண பெளத்த சங்கங்களை அழிக்கவும், பௌத்த சாஸ்திரங்களையும், பௌத்த மடங்களையும், பௌத்த உபாசகர்கள் யாவரையும் நிலைகுலையச் செய்யவும் ஆரம்பித்துக்கொண்டார்கள்.

மிலேச்சர்களாம் ஆரியர்களின் பிராமணவேஷம் பெருகுவதற்கும் அவர்களது மிலேச்சம் நீங்கி கனமடைவதற்கும் இத்தேசத்தோர்களின் பிராமணவேஷமே மிக்க அநுகூலமாகிவிட்டது. அதனால் திராவிட பெளத்த உபாசகர்கள் ஆரியர்களைக் காணுமிடங்களிலெல்லாம் அடித்துத் துரத்திக் கொண்டே வரும் வழக்கங்களுக்கு சிற்சில தடைகளுண்டாகி தாங்கள் வாசஞ் செய்யும் வீதிகளில் மட்டிலும் வரவிடாமல் துரத்தி சாணந்துளிர்த்து வந்தார்கள்.

பழைய வேஷப் பிராமணர்களுடன் புதிய வேஷப்பிராமணர்களும் மேலும் மேலும் பெருகுவதினால் ஒருவருக்கொருவர் புசிப்பற்றும், ஒருவருக் கொருவர் பெண் கொடுக்கல் வாங்கலற்றும், ஒருவரைக் கண்டால் ஒருவர் முறுமுறுத்துக்கொண்டு போவதே வழக்கமாயிருந்ததன்றி நீங்களெவ்வகையால் பிராமணர்களானீர்களென்று கேட்பார்களானால் தாங்கள் எவ்வகையில் பிராமணர்களானீர்களென்னும் வினா எழுவுமென்றெண்ணி அந்தந்த பாஷைக்கார வேஷப்பிராமணர்கள் அவரவர்களுக்குள்ளடங்கி கல்வியற்றக் குடிகளை வஞ்சித்துப்பொருள் பறித்துண்ணும் சோம்பேறி சீவனத்தை விருத்திக்குக் கொண்டுவந்துவிட்டார்கள்.

மிலேச்சர்கள், பெளத்த சங்கத்திலுள்ள அறஹத்துக்களாம் யதார்த்த பிராமணர்களைப்போல் வேஷமிட்டு சோம்பேறி சீவனஞ் செய்ய ஆரம்பித்துக் கொண்டதும் அவர்களின் சுகசீவனங்கண்ட ஆந்திரர்களும், கன்னடர்களும், மராஷ்டகர்களும், திராவிடர்களும் தங்கள் தங்கள் பெண் பிள்ளைகளுடன் பிராமணர்களென வேஷமிட்டு கல்வியும் விசாரிணையுமற்றப் பெருங் குடிகளையும், ஞானமற்ற அரசர்களையும் வஞ்சித்து சீவிக்க ஆரம்பித்த செய்கையால் ஆந்திரசாதி யரசன், கன்னட சாதி யரசன் மகளை விவாகம் புரிவதும், சிங்களசாதி யரசன் மகன் திராவிடசாதி அரசன் மகளை விவாகம் புரிவதும், வங்காள சாதி யரசன் மகன் சீனசாதி அரசன் மகளை விவாகம்புரிவதும், அரசன் எவ்வழியோ குடிகளும் அவ்வழியெனும் ஒற்றுமெயும் அன்பும் பாராட்டி அபேதமுற்று வாழ்ந்துவந்த இந்திர தேசத்தாருக்குள் பேதமுண்டாகி ஒருவருக்கொருவர் பொசிப்பிலும், ஒருவருக்கொருவர் கொள்வினை கொடுவினையிலும் பிரிவினைகளுண்டாகி வித்தியா கேடுகளும், விவசாயக் கேடுகளும் பெருகி தேசமும் தேசத்தோர்களும் கெடுதற்கு இவர்களது பிராமண வேஷமே அடிப்படையாயிற்று.

மிலேச்சர்களாம் ஆரிய வேஷப்பிராமணர்கள் ஆந்திர வேஷப் பிராமணர்களைக் கண்டவுடன் சீறுகிறதும், ஆந்திர வேஷப்பிராமணர்கள் கன்னட வேஷப்பிராமணர்களைக் கண்டவுடன் சீறுகிறதுமாகியப் பொறாமெயால் உள்ளத்தில் வஞ்சினத்தை விளைவித்துக்கொள்ளுவதேயன்றி நீங்கள் எப்படி பெண்டு பிள்ளைகளுடன் பிராமணர்களாகிவிட்டீர்கள், அவர்களெப்படி பெண்டு பிள்ளைகளுடன் பிராமணர்களாகிவிட்டார்கள் என்னுங் கேழ்விகளில்லாமல் அரசன் கெட்டாலென்ன குடிகள் கெட்டாலென்ன வித்தைகள் கெட்டாலென்ன, விவசாயங் கெட்டாலென்ன தங்கடங்கள் பெண்டு பிள்ளைகளுடன் பிராமணவேஷத்தோர் பிழைத்துக் கொண்டால் போது