பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/669

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமூகம் / 621


ஆரியர்களாம் மிலேச்சர்கள் எடுத்துக் கொண்ட பிராமண வேஷங்களைப்போல் ஆந்திரசாதி, கன்னடசாதி, மராஷ்டகசாதி, திராவிட சாதிகளென வகுக்கப்பட்டிருந்த இத்தேசத்திய சோம்பேறிகளிற் சிலரும் பிராமணவேஷமெடுத்துக்கொண்டபடியால் பௌத்தபோதகர்களின் போதனையால் கேட்டிருந்த பிரம்மா முகத்திற் பிறந்தாரென்னும் சிலேடையாம் சிறப்பு மொழிகளை மெய்யாகவே ஓர் பிரம்மாமுகத்திற் பிறந்தவர்களென்னும் கட்டுக்கதையை போதித்துக் கல்வியற்றக் குடிகளிடம் சகல வேஷப் பிராமணர்களும் சிறப்பைத் தேடிக்கொண்டார்கள். பிரம்மா முகத்திற் பிறந்தாரென்னும் சிலேடை மொழியையும் சிறப்புப்பெயரையும் அறியாக் கல்வியற்றக் குடிகளும் அவற்றை நம்பி வேஷப்பிராமணர்களையே மிக்க சிறப்பிக்கவும் அவர்களுக்கே தானம் ஈய்யவும் ஆரம்பித்துக்கொண்டார்கள்.

கல்வியற்றக் குடிகள் வேஷப்பிராமணர்களையே மிக்கநம்பவும் அவர்களது போதனைகளுக் குட்படவும் பூர்வ பௌத்ததன்மத்தையும், யதார்த்த பிராமணர்களையும் மறந்து அவர்களுக்கு எதிரிகளாகவும் சீலங்களை மறக்கவும் நேரிட்டக் காரணங்கள் யாதெனில், பௌத்த உபாசகர்களுக்குள் ஒரு மனைவியன்றி மறு மனைவியை சேர்க்கப்படாதென்றும், தன் மனைவியையன்றி அன்னியர் மனைவியை இச்சிக்கப்படாதென்றும் சீலநிலையை வகுத்திருந்தார்கள். அத்தகைய சீலத்திற்கு எதிரடையாக வேஷப் பிராமணர்கள் தங்களுடைய தேவதைகளுக்கு இரண்டு பெண்சாதிகளை உண்டு செய்துள்ளதுமன்றி பெண்ணிச்சையற்று பிராமணநிலை யடையவேண்டிய செயல்களை அகற்றி இரண்டு பெண்சாதி மூன்று பெண்சாதியுள்ள பிராமணர்கள் தோன்றிவிட்டபடியால் உபாசகர்களும் தங்கள் இச்சையைப்போல் எத்தனைப் பெண்சாதிகள் வைத்துக்கொண்டாலும் குற்றமில்லையென்னும் போதனையையும், காமவிச்சைக்கேற்ற வழிகளுக்குமோர் ஏதுவாயிற்று.

பௌத்ததன்ம உபாசகர்கள் மதுவென்னும் லாகிரிவஸ்துக்களை யருந்தாமலும், மாமிஷமென்னும் புலாலை புசியாமலும் மிக்க சீலமாய் புத்ததன்மத்தைத் தழுவிவந்தார்கள். வேஷப் பிராமணர்களோ மாடுகளையும், குதிரைகளையும் சுட்டு அதன் புலாலை புசிப்பவர்களாகவும், மதுவென்னும் சுராபானம் அருந்துபவர்களாகவும் இருப்பதைக் கண்டுவருங் கல்வியற்றக் குடிகள் தங்கள் இச்சையைப்போல் சுராபானம் அருந்தவும், புலால் புசிக்கவுமாகிய வழிகளுக்கும் ஓர் ஏதுவாயிற்று.

பெளத்த உபாசகர்கள் பொய்யாகிய வார்த்தைகளைப் பேசாமலும், பொய்சொல்லுவோர் வார்த்தைகளை நம்பாமலும் யாவரிடத்தும் மெய்யைப் பேசவேண்டுமென்னும் சீலமாம் சத்தியதன்மத்தில் நிலைத்திருந்தார்கள் வேஷப்பிராமணர்கள் உலக ஆசாபாச பந்தத்திலும், பேராசையிலும், வஞ்சினத்திலும், ஒழுக்க மற்ற நடையிலும், நாணமற்றச் செயலிலும் இருந்துக்கொண்டு தங்களை பிராமணர் பிராமணரெனத் தாங்களே சொல்லித் திரிவது முதற்பொய்; ஓர் பிரம்மாவின் முகத்தினின்றே பிறந்தவர்களென்று கூறித்திரிவது இரண்டாவது பொய்; தங்கள் தேவதைகளைக் காண்பதற்கும், தெய்வகதி பெருவதற்கும் தங்களைக்கொண்டே மற்றவர்கள் பெறவேண்டும் என்பது மூன்றாவது பொய்; இந்தசாமி அவர்களுக்கு மோட்சங்கொடுத்தார், அந்தசாமி இவர்களுக்கு மோட்சங்கொடுத்தார், இந்தசாமி பூலோகத்தினின்று வானலோகம் போனார், அந்தசாமி வானலோகத்தினின்று பூலோகத்திற்கு வந்தாரென்பது நான்காவது பொய்; இத்தகைய தேவகதைகளையே பெரும் பொய்க் கதைகளாகக் கேட்டுத்திரியும் கல்வியற்றக் குடிகளுக்கு உலகவாழ்க்கையிற் பொய்ச் சொல்லுவதால் யாதுகெடு மென்னும் அச்சமற்று பொய்யை மெய்யைப்போற் பேசவுமோர் ஏதுவாயிற்று.

பெளத்த உபாசகர்கள் கொல்லாவிரதத்தை சிரம்பூண்டு அகிம்சா தன்மத்தில் நிலைத்து சீவப்பிராணிகளைத் துக்கத்திற்கு ஆளாக்காமலும், துன்பஞ் செய்யாமலும் ஆதரித்து வந்தார்கள். வேஷப்பிராமணர்களோ பசுக்களையும், குதிரைகளையுங்கொன்றுத் தின்பதுடன் தங்கள் சாமிகளில் இந்தசாமி