பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/710

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

662 / அயோத்திதாசர் சிந்தனைகள்


மகதநாட்டுச் சக்கிரவர்த்தி யென விளங்கிய மண்முகவாகின் மனைவி கருப்பமடைவதற்குமுன்பு தனது சொர்ப்பனத்தில் சுயம்பிரகாசமாய் ஓர் வெள்ளையானையின் குட்டிவயிற்றுள் நுழைந்ததுபோற் கண்டு விழித்தவுடன் பத்தாவை அணுகி தனது சொர்ப்பனத்தில் கண்ட விஷயங்களை வெளியிட்டவுடன் மண்முகவாகு அசித்த சாக்கையரென்னும் பெரியோனை வரவழைத்து சொர்ப்பனத்தை வெளியிட்டான். அசித்த சாக்கையரும் சற்றாலோசித்து உமக்கு யானையின் உறத்தைப்போன்ற ஓர் ஆண்குழந்தை பிறக்கும், அதற்குள்ள சுத்தஞானத்தாலும், சுத்த போதத்தாலும் சுத்தச் செயலினாலும் உம்மெய்க் காண்போர் சுத்தயிதயனென்றும், சுத்தயிதயன்பெற்ற சுப்பிரதீப்னென்றுங் கொண்டா டுவார்களென்று கூறிப்போய்விட்டார்.

அதன்பின் சித்தார்த்தி சக்கிரவர்த்தியார் பிறந்து வளர்ந்து சுத்தஞானமுற்று சுயக்கியான போதகராயபோது தன்னை சுராபான மயக்கத்தால் உபத்திரவஞ் செய்த ஓர் யானையை உபத்திரவமில்லாமல் ஒருகரத்தா லேந்தி எறிந்தவற்றைக் கண்ணாரக் கண்டோர், யானையுறத்தோன் யானையுறத்தோனெனக் கொண்டாடிவந்தவற்றிற்குப் பகரமாக திராவிட வேஷப்பிராமணர்கள் கட்டிய சிலாலயத்துள் அறுபீடங்களை வகுத்து முதற்பீடமே விக்கின பீடமென்று கூறி கோசத்தையும் பீஜத்தையுமடித்து பீடத்தில் வைத்து சிந்தித்தவற்றுள் யானையின் துதிக்கைபோலும், முகம்போலும் பிரிந்திருந்தபடியால் யானைமுக விக்கினவிநாயகனெனக் கொண்டாடிவந்தார்கள். அதை அநுசரித்தே கற்பனா கதைகளை உண்டு செய்த வேஷப்பிராமணர்கள் அவரவர்கள் மனம்போனவாறு கல்வியற்றக் குடிகளை வஞ்சித்துப் பொருள்பறிப்பதற்காய யானைமுக விநாயகனை உண்டு செய்துக்கொண்டார்கள்.

ஈதன்றி தென்காசிக்குமேல் கார்வெட்டிநகரை அரசாண்டுவந்த பௌத்த தன்ம அரசனொருவனிருந்தான். அவனது மனைவி பூம்பாவை யென்னுமோர் இராக்கினியுமிருந்தாள். மயிலை புத்தவியார பிச்சையாண்டி வேஷ உற்சாகங் காணவேண்டிவந்து பாம்புகடித்து இறக்கவும் சாக்கையர் துக்கங்கொண்டாடி தகனஞ் செய்யப்பட்டவளுமவளேயாம்.

அவளது கணவனாகிய மணிவண்ணனென்னும் அரசனோமிக்க அதிரூபமும் வல்லமெய் புருடனுமாயிருந்ததுடன் ஓர் திடகாத்திரமுள்ள மனிதனுக்கு இரக்கை சூஸ்திரம் ஒன்று செய்து அவன்மீதேறி ஆகாயத்திலு லாவவும், கீழிறங்கவும், அம்பேந்தி யுத்தகளங்களுக்குப் போகவும், சத்துருக்களை ஜெயிக்கவுமாய கருடவாகனனென்னும் பெயரும் பெற்றிருந்தான். அக்காலத்தில் கார்வெட்டி நகரத்திற்கு வடமேற்கேயுள்ள மலையடிவாரக் குகையில் ஓர் பெரும் மலைசர்ப்பம் இருந்துகொண்டு அருகில் செல்லும் ஆடுமாடுகளையும் மக்களையும் தனது வலுத்த சுவாசத்தால் இழுத்து புசித்துக்கொண்டே வாழ்ந்திருந்தது.

இவற்றைக் கண்ணுற்றுவரும் அத்தேச மக்கள் ஈதோர் காளிசர்ப்பம் என பயந்து அவற்றிற்கு ஆடுமாடுகளைக் கொண்டுபோய் விடுத்து மக்களைத் தொடாமலிருக்கப் பூசித்துவருவது வழக்கமாகும். அவ்வகைப் பூசித்தும் அதன் துற்குணம் மாறாது ஆடுமாடுகளைப்போல் மக்களையும் புசித்துவந்தபடியால் அத்திக்குநோக்கி ஆடுமாடுகளை மேய்ப்பதும் மக்கள் நடப்பதுமில்லாமற் போய்விட்டது. அதனை உணர்ந்த மணிவண்ணன் சூஸ்திரகருடனை வரவழைத்து அம்பிராதூணியுடன் அதன்மீதேறி மலைசர்ப்பம் வீற்றிருக்குங் குகையைநாடி சென்றபோது அக்காளி சர்ப்பமும் வெளி கிளம்பிற்று, உடனே மேனின்று பாணப் பிரயோகஞ் செய்தபோது சர்ப்பங் குகையினின்று வெளிதோன்றி ஓர் சிறுங்குன்று உருளுவதுபோலுருண்டெழும்பியது. உடனே மணிவண்ணன் சுத்தவீரனாதலின் கருடனைவிட்டு சர்ப்பத்தின்மீது பாய்ந்து உடைவாளையுருவி அதன் சிரத்தைப் பிளந்து அதன்மீது நின்றான். காளிசர்ப்பங் கொல்லப்பட்ட சங்கதியைக் கேழ்விப்பட்ட அத்தேசத்தோர்கள் யாவரும் ஓடிவந்து அரசனைக் கொண்டாடி ஆனந்தக்கூத்தாடினார்கள்.