பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/709

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமூகம் / 661


புத்தபிரானுக்கு விநாயகரென்னும் பெயர் தோன்றிய காரணமோ வென்னில் ஒவ்வோர் சங்கங்களுக்கு சபாநாயராகவும் கணநாயகராகவும் இருக்கும்வரையில் அவரை சபாநாயகரென்றும், கணநாயக ரென்றும் வழங்கிவந்தவர்கள் உலககெங்கும் நாட்டிய சத்தியசங்கங்கள் யாவற்றிற்கும் அவரே நாயகராக விளங்கியதுகொண்டு புத்தபிரானை விநாயகர், விநாயகரென வித்தியாரம்ப காலங்களிலெல்லாம் விசேஷமாகக் கொண்டாடி வந்தார்கள்.

அக்கால் இவ்வேஷப்பிராமணர்கள் தோன்றி யதார்த்த பிராமணர்களும் சங்கங்களும் நிலைகுலைந்து வருங்காலத்தில் கல்வியற்ற குடிகள் ஆரியவேஷப் பிராமணர்களையடுத்து விநாயகரை போஷித்து அவிற்பிரசாதங் கொடுக்காமலிருக்கின்றீர்களே, காரணமென்னையென்று கேட்க ஆரம்பித்தபோது விநாயகரென்னும் பெயரும் அப்பெயரின் உற்பவமும் அப்பெயர் யாவர்க்குரியவை என்றும் அறியாத வேஷப்பிராமணர்கள் திகைத்து அவரவர்கள் மனம் போன்றவாறு ஒவ்வோர்கட்டுக்கதைகளை உண்டுசெய்து கல்வியற்றவர்களை ஏய்த்துவிட்டார்கள்.

அதாவது கல்வியற்றக் குடிகள் ஆரிய வேஷப்பிராமணர்களை அடுத்து விநாயகரை விசாரிக்குங்கால் ஓர் காட்டில் ஆண்யானையும் பெண் யானையும் மறுவுங்கால் சிவனும் உமையவளுங் கண்டு தாங்களும் மறுவ, யானைமுகக் குழந்தையொன்று பிறந்து சகல மக்களுக்கும் அட்சரவித்தை பயிற்று வித்தபடியால் அவரைதான் வித்தைக்கு முதலாக சிந்திக்கவேண்டுமென்று அவர்கள் தொடுக்குங் காரியாதிகளுக்கெல்லாம் அவுல், கடலை, தட்சணை, தாம்பூலங் கொண்டுவரும் ஏதுவைத் தேடிக் கொண்டார்கள்.

கல்வியற்றக் குடிகள் திராவிட வேஷப்பிராமணர்களை அடுத்து விநாயகரை விசாரிக்குங்கால் அவர்கள் யாதுகூறி பொருள் பரிக்க ஆரம்பித்துக் கொண்டார்கள் என்னில் பார்வதி கருப்பந்தரித்திருக்குங்கால் சிவனுக்கு விரோதியாய ஓரசுரன் கருப்பையில் காற்றுவடிவாக நுழைந்து குழந்தையின் சிரசைக் கொய்துவிட்டதாகவும் அதற்கு மாறுபட ஓர் யானையின் தலையை வைத்து உயிர்ப்பித்ததாகவுங் கூறி சகல ஆரம்பங்களிலும் அவ்விநாயகரை சிந்திக்க அவுல், கடலை, தேங்காய், தட்சணை தாம்பூலங் கொண்டுவரவேண்டி சீவனாதாரத்தைத் தேடிக்கெண்டார்கள்.

கல்வியற்றக் குடிகள் ஆந்திர வேஷப்பிராமணர்களையடுத்து விநாயகரை விசாரிக்குங்கால் அவர்களும் விநாயகப்பெருமானின் விசேஷம் அறியாதவர்களாதலின் தங்களுடைய சிவனென்னுங் கடவுள் தக்கனென்னும் அசுரனின் யாகத்தையழிப்பதற்கு தனது முதற்பிள்ளையை அநுப்பியதாகவும், அப்பிள்ளையின் சிரம் யுத்தத்தில் வெட்டுண்டு காணாது போனதாகவும் அவருக்குப்பின் சென்ற இரண்டாவது பிள்ளை சுப்பிரமணியர் சென்று இறந்துகிடந்த ஓர் யானையின் சிரசை வைத்து உயிர்ப்பித்ததாகவுங் கூறி அதை பூசிக்கவும் தட்சணை தாம்பூலம் பெறவும் ஆரம்பித்துக்கொண்டார்கள்.

மற்றுஞ் சில கல்வியற்றக் குடிகள் கன்னடவேஷப்பிராமணர்களை யடுத்து விநாயகரை சிந்திக்கும் விஷயங் கேழ்குங்கால் பார்வதி நீர் விளையாடிக் கொண்டிருக்கும்போது தன் தேகவழுக்கைத் திரட்டி ஓர் குழந்தையை உண்டு செய்து வாயில்காக்கும்படி செய்ததாகவும், சிவன்வந்தபோது அவருக்கு வழிவிடாதபடியால் அக்குழந்தையை வெட்டிவிட்டு உள்ளே நுழைந்தபோது பார்வதிக்குத் தெரிந்து துக்கித்ததாகவும், சிறுவன் வெளிவந்து சிவன் சிரசைத் தேடியுங் காணாததால் அங்குள்ள ஓர் யானையின் சிரசைக் கொய்து அப்பிள்ளையின் உடலில் சேர்த்து உயிர்பித்ததாகவும் அப்பிள்ளையே விநாயகனென்றும், அதையே சகல வித்தியாராம்பங்களிலும் தொழ வேண்டும் என்றுங்கூறி பொருள்பறிக்கும் வழியைத் தேடி அக்கற்பனைகளை ஓலைச் சுருட்களிலும் எழுதி மெய்க்கதைகளென்று ரூபிக்கும் புராணங்களையும் வரைந்துக்கொண்டார்கள்.

விநாயகரை சிந்திப்பதற்கு யானையின் முகத்தையே ஒவ்வோர் ஆதரவாக கொண்டு கற்பனாகதைகளுண்டுசெய்துகொண்டக் காரணங்கள் யாதென்பீரேல்;