பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/714

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

666 / அயோத்திதாசர் சிந்தனைகள்

அதனால் கல்வியின் விருத்தியும் கைத்தொழில் விருத்தியுங் குன்றிப்போமென்றும் இம்மெயில் ஒருக்கல்லை வைத்துப் பூசித்து சீர்கெடுவோன் மறுமெயில் பத்துக்கல்லைவைத்துப் பதமழிவானென்றும் போதித்து வருவனவற்றைக் கேட்டுணர்ந்து சில விவேகிகள் வேஷப்பிராமணர்களையடுத்து எக்கருமத்தை இம்மெயில் செய்துவிடுகின்றானோ அக்கருமமே அவனை மறுமெயிற் தொடருமென்பது முன்னோர்கள் போதமாயிருக்க, இக்கற்சிலைகளைத் தொழலால் பிணிநீங்குமென்றும், இக்கற்சிலைகளைத் தொழலால் சம்பத்துண்டாமென்றும், இக்கற்சிலைகளைத் தொழலால் புத்திரபாக்கியமுண்டாமென்றும், இக்கற்சிலைகளைத் தொழலால் முத்தி பேறுண்டாமென்றுங் கூறுவதும் அவ்வகைக்கூறியே பொருள்பறிப்பதுமாயச் செயல்களையும் போதகங்களையும் நோக்குங்கால் அச்செயல்கள் யாவும் தங்களுக்காய சுயப்பிரயோசனச் செயல்களாகக் காணப்படுகிறதன்றி எங்களுக்காயப் பிரயோசனம் ஒன்றையும் காணோமேயென்று கேட்க ஆரம்பித்துக்கொண்டார்கள்.

அக்கேள்விகளை உணர்ந்த வேஷப்பிராமணர்கள் சற்று நிதானித்து பகவனாம் புத்தபிரானால் போதித்துள்ள தன்மங்களில் உங்களுக்குள்ள துற்கன்மங்கள் நற்கன்மங்கள் யாவையும் நன்காராய்ந்து உங்களுக்குள் நீங்களே துற்கன்மங்களை அகற்றி நற்கன்மங்களை பெருக்கி உங்களுக்குள்ள உண்மெயில் அன்பை வளர்த்துங்கள். அத்தகைய உண்மெய்யுணர்ச்சியில் உங்களுக்குள்ள இராகத்துவேஷமோகங்களை நீங்களே அகற்றி உங்களுக்குள்ள பேரின்ப சுகத்தை நீங்களே அநுபவிப்பீர்களென்னும் வாக்கியத்தைக்கொண்டு தன்மபாத மென்னும் இருசீரடி பெளத்த போதங்களையே ஓராதாரமாகக் கொண்டும் புத்தரது பெயரையே பீடமாகக் கொண்டும் பகவத்கீதை என்னும் ஓர் நூலை வரைய ஆரம்பித்துக்கொண்டார்கள்.

அதாவது, பன்னீராயிரம் கோபிகா ஸ்திரீகளின் லீலா வினோதனும், அர்ச்சுனனுக்கு சுபுத்திரை, பவழவல்லி, அல்லி யரசாணி முதலிய ஸ்திரீகளைக் கூட்டி வைத்தவருமாகிய பாரத கதாபுருஷன் கிருஷ்ணனுக்கு புத்தருக்குரிய பகனென்னும் பெயரைக்கொடுத்து, அப்பகவனாற் போதித்த பகவத்கீதையென வகுத்து, பூர்வ சத்தியதன்மத்தில் சிலதைக் கூட்டியுங் குறைத்தும் தன்னை போஷிக்கவேண்டும், தன்னை ஆராயவேண்டும், தன்னை சிந்திக்கவேண்டும் மென்னுந் தன்மங்களை என்னை போஷிக்கவேண்டும், என்னை ஆராய வேண்டும், என்னை சிந்திக்கவேண்டுமெனக் கிருஷ்ணன் கூறியதுபோல் ஆரம்பித்து சிலைகளைத் தொழுது முத்திபேறுபெற விருப்பற்றவர்கள் கிருஷ்ணனாகிய என்னைத் தொழுவீர்களாயின் சகலமும் நானாதலால் நானே முன்னின்று சுகமளிப்பேனென்பதுடன் கொல்லவைப்பவனும் நானே, கொல்லுபவனும் நானே, கொல்லப்படுபவனும் நானே யென வரைந்துவைத்துக் கொண்டு, இஃது பாரத யுத்தாரம்பத்தில் அர்ச்சுனன் வில்லை வளைத்து குணத்தொனிசெய்து படையை நோக்கியபோது சகல சேனைத்தலைவர்களும் தனது பந்துமித்திராகத் தோன்றியபடியால் வளைத்த வில்லை நிமிர்த்தி சோர்வடைந்தானாம். அதைக்கண்ட கிருஷ்ணன் இக்கீதையை அர்ச்சுனனுக்குப் போதித்து யுத்தவுச்சாகம் உண்டாக்கியதாகப் பாயிரம் ஏற்படுத்திக் கொண்டார்கள்.

இக்கீதையை முற்றும் வாசிப்பவர்கள் சற்று நிதானித்து வில்வளைத்து குணத்தொனி செய்தபின் இக்கீதையை சொல்லிமுடிக்கும் வரையில் எதிரியின் சேனைத் தலைவர்கள் பொறுத்திருப்பார்களா என்பதை ஆலோசிப்பார்களாயின் இஃது யுத்தகாலப் போதனா கீதையன்று, காலத்திற்குக்காலம் சாவகாசத்தில் வரைந்துக் கொண்ட கீதையென்றே தெள்ளற விளங்கும். பௌத்தரிடமுள்ளக் கர்ணராஜன்கதையில் கிருஷ்ணன் பெயருங் கிடையாது, இக்கீதையுங் கிடையாது.

ஈதன்றி பெளத்த தன்ம சாஸ்திரிகள் உடலுயிர் பொருந்தும் செயலுக்குரிய புருஷனுக்கு ஆன்மனென்னும் பெயர்கொடுத்து அப்பெயரை ஓர் புருஷன்