148 - சுந்தர சண்முகனார்
கொற்றவன் அது கூறலும் கோகிலம்
செற்ற தன்ன குதலையள் சீறுவாள்
உற்று நின்ற துயரம் இது ஒன்றுமோ?
எற்றுறந்தபின் இன்பம் கொலாம் என்றாள்
(228)
எற்றுறந்தபின் என்பதை என் துறந்தபின் என்று பிரித்துப் பொருள் காணல் வேண்டும். சீதை தன் உரை வன்மையால் எண்ணியதை முடித்துக் கொண்டாள்.
உலகியலில் கூடச் சில நேரம் மனைவி கணவனை நோக்கி, நான் இருப்பது உங்கட்கு இடையூறாய் இருக்கிறது, நான் போய்விட்டால் நீங்கள் நிம்மதியாய் இருப்பீர்கள்- என்று கூறுவதைக் கேட்டிருக்கலாம்.
ஈன்றவள் செய்கை
நீ தான் முடி சூடிக் கொள்ள வேண்டும் என வற்புறுத்திய முனிவர் முதலான அவையோர்க்குப் பரதன் ஆணித்தரமான பதில் இறுக்கிறான். மூன்று உலகிற்கும் முதல்வன் போன்ற இராமன் இருக்க, இளையவனாகிய என்னை முடி சூடிக்கொள்ளும்படிச் சான்றோர்கள் சொல்வது அறநெறி எனில், என்னை ஈன்ற கைகேயியின் செயலும் அறநெறி என்று சொன்னால் தவறு ஏது?
மூன்று உலகினுக்கும் ஓர் முதல்வனாய் முதல் தோன்றினன் இருக்க, யான் மகுடம் சூடுதல் சான்றவர் உரை செயத் தருமம் ஆயதேல்
ஈன்றவள் செய்கையில் இழுக்கு உண்டாகுமோ?
(14)
எனக்கு முடி சூட்ட முயன்ற கைகேயியின் செயல் எவ்வாறு முறையில்லையோ- அவ்வாறே நீங்கள் என்னை வற்புறுத்துவதும் முறையன்று- என்கிறான்.