பக்கம்:அய்யன் திருவள்ளுவர்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அய்யன் திருவள்ளுவர்


ஆராய்ச்சி என்ற முறையில் அது வெறுப்பைத் தான் அளிக்கின்றது.

எனது திருக்குறளை யாரும் பாராட்டலாம் என்பது வேறு! எவனும் என்னுடையது என்று உரிமை கொண்டாடுவது வேறு!

பொதுச் சொத்தை எவனும் உரிமையாக்கிக் கொள்ளலாம் என்பது சமுதாயத் துரோகமும் - விரோதமும் ஆகாதா?

தெரியாது என்பதை, தெரியாது என்று கூறுவதில் யாரும் வெட்கப்பட வேண்டியதில்லை !

தெரியாத ஒன்றை, தெரிந்த ஒன்றோடு உவமைப் படுத்தும் போதுதான், ஆராய்ச்சியாளனுக்கு எரிச்சலும், கவிஞனுக்கு மகிழ்ச்சியும் ஏற்படுகின்றது.

இந்த நிலையில், திரு. புலவர் தெய்வநாயகம் அவர்கள் எழுதிய 'திருவள்ளுவர் கிறித்துவரா? ஐந்தவித்தான் யார்? நீத்தார் யார்? வான் எது? எழு பிறப்பு, சான்றோர் யார்?" என்று கிறித்துவ அடிப்படையில் எழுதப்பட்ட ஆறு நூல்களை ஆய்வதற்காக - அறிஞர்கள், பெரும் புலவர்கள், கல்லூரி பேராசிரியர்கள், மொழி ஆய்வாளர்கள், டாக்டர் பட்டம் பெற்றவர்கள் அத்தனை பேரும் இங்கே வந்து கூடியிருக்கின்றீர்கள்.

உங்களுடைய வாய்வழியே வந்து தெறிக்கும் கருத்துக்கள் அத்தனையையும், பொது நோக்காக வைக்கப் போகின்றீர்களா? அல்லது குறிப்பிட்ட ஒர் எல்லைக்குள் நிறுத்தப் போகின்றீர்களா?

அது உங்களுடைய விருப்பம்!

'வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான் புகழ் கொண்ட தமிழ்நாடு' என்று பாரதியார் கூறினார். ஆனால், ஒரு மதத்திற்கே தந்து என்று அவர் கூறவில்லை என்பதைக் கவனத்திலிருத்த வேண்டுகின்றேன்.

இந்தக் காலத்தில் ஒரு பூஞ்செடியைக் கூட, ஒருவன் தனி உரிமை கொண்டாட முடியாது. ஏனென்றால், இயற்கை முன்னே அது பொதுச் சொத்து.

மிருகத்தைவிட - உயர்ந்தவன் மனிதன் என்பது உண்மை-

154