பக்கம்:அய்யன் திருவள்ளுவர்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அய்யன் திருவள்ளுவர்


தமிழ்ப்பண்புகள் - சிந்தும் தேன்மலர்கள்-
அவர் எழுதிக் குவித்த நூல்கள்! -
காலமெலாம் நாறும் மனோ ரஞ்சிதங்கள்!

சந்தத்திற்கு அடிமையாகும் சந்தக் கவியா?
செந்தமிழுக்குப் பாரதிதாசனாரே சான்று!
உருகும் வெள்ளியை ஒழுங்காகச் சொல்லாக்கி,
பெருகும் தமிழுணர்வை, பொற்குழம்பை
வாரிப் பூசிச் சமைத்தக் கவிதைகள்
தமிழர்க்கு ஊன்று கோல்கள்.

"வாழும் வகை செய்யும் “பா”, மருந்து -
இருட்டுக்கு விளக்கு சமுதாயத்திற்கு நெறி! -
அவரது கவிதைகள்:
தமிழியக்கம் தலை தூக்கி நிமிர -
அமுதைக் கடந்து அள்ளித் தந்த சொற்கோ !
கனல் பட்டெரியும் கற்பூரம்போல், அவர் தமிழின் -
அனல் பட்டு எதிரிகள் தீய்ந்தனர்.

காற்றைக் கட்டளையிட்டு,
கடலை வேலை வாங்கி,
மலையைத் தொழச்செய்து,
தென்றலைக் கவரி வீசவைத்து,
அருவியை ஆராரோ பாடச் செய்த - அற்புதமான
இயற்கைக் கவிஞர் - புரட்சிக் கவிஞர்!

பாவேந்தர் புகழை - நாவேந்தர் ஒருவர்
சிலையாக்கி, இனம் மறவா வடிவமாக்கி,
அலையாடும் கடலோரம்
அழகாக வைத்தவர் அறிஞர் அண்ணா !

மூச்சுள்ள வரையிலும்
முத்தமிழைப் பாடினார் பாரதிதாசன்! அந்த
மூச்சைத் தன் மூச்சாகக் கொண்டு,
கவிப் பெருமையைப் புவி போற்ற
நிலைநாட்டிய, அந்த
அறிஞர் குல அறிஞரை - நம்மால்
நினையாமல் இருக்க முடியவில்லை.

74