பக்கம்:அரசாண்ட ஆண்டி.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

85


புகழ் எப்படிக் குவிந்ததோ, அதைவிட வேகமாகச் செல்வம் ரிஷ்லுவிடம் குவிந்தது.

வீடு வாசல் தோட்டம் துரவு என்னும் அசையாப் பொருள்களை நீக்கி, பணமாக மட்டும், உயிலின்படி, உறவினர்களுக்கும் ஊழியர்களுக்குமாக ரிஷ்லு தந்த தொகை ஏறக்குறைய முப்பது இலட்சம் பிரன்ச்சு பவுன் என்றால் ரிஷ்லுவிடம் குவிந்திருந்த செல்வத்தின் அளவு எவ்வளவு என்பது ஒருவாறு விளங்கும்.

ஒவ்வொரு அரசியல் குழப்பமும் இலாபகரமான பதவியைத் தந்த வண்ணமிருந்தது, ரிஷ்லுவுக்கு.

மன்னனுக்கு மகிழ்ச்சி ஏற்படும்போதெல்லாம், ரிஷ்லுவுக்கு புதுப் பண்ணைகள் கிடைக்கும்.

பல பதவிகள் ஒரே காலத்தில்--ஒவ்வொரு பதவிக்கும் தனித் தனி வருமானம்! செல்வம் குன்றெனக் குவியத் தானே செய்யும்.

இவ்வளவு பெரும் பொருளைச் சேகரித்த ரிஷ்லு, வாழ்க்கையிலே ஆடம்பரமற்று, செலவின்றி இருந்தானோ எனில், அதுவுமில்லை; மாளிகைகள் பொறாமைப்படும் செலவு.

பாதுகாப்புக்காக மட்டும் ஆயுதம் தாங்கிய காவலர்கள் நூறு பேருக்குமேல்--சம்பளத்துடன்.

பல்லக்கிலே சவாரி, பரிவாரம் சூழ!

மாளிகையிலே உயர்தரமான அலங்காரப் பொருள்கள்.

குதிரைக் கொட்டில்கள் இரண்டு, அவைகளில் உயர்தரமான குதிரைகள்.

மருத்துவர்கள், உடலை அவ்வப்போது கவனிக்க வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்தனர்.

நாட்டின் பிரபுக்களில் ரிஷ்லுவுக்கு வேண்டியவர்களுக்கு அடிக்கடி விருந்து வைபவம் நடத்திவைக்கப்படும்--செலவு தாராளமாக.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசாண்ட_ஆண்டி.pdf/85&oldid=1549068" இலிருந்து மீள்விக்கப்பட்டது