இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
நம்மாழ்வார் . 69
வருவதுபோன்று காட்சி தந்த மாயன் வாராதிருந்து விட்டானாம். ஆனால் சற்றும் எதிர்பாராத நேரத்தில் இனி எங்கே வரப் போகின்றான்? என்று அயர்ந்து இருக்கும் நேரத்தில் திடீரென்று வந்து விடுகிறானாம். இதனையும் பெரியார்,
‘வந்தாய் போலே வாராதாய்!
வாராதாய்போலவருவானே!” (நாலா: 2741)
என்று அடிகளார் குறிப்பிடுகின்றார்.
எதிர்பார்த்திருக்கையில் வாராதிருத்தலும், எதிர்பாரா நேரத்தில் அற்றம் பார்த்து உள்ளுழைதலும் யாருடைய செய்கை? கள்வர்க்குரிய செயலன்றோ? அரியபொருளைத் திருட வரும் கள்வர் எதிர்பாரா நேரத்தில் அற்றம் பார்த்து நுழைதல் போல அரியப் பொருளாகிய ஆன்மாவை நாடிவரும் இறைவனும் எதிர்பாரா நேரத்தில் வருகின்றானாம்.
ஆழ்வார் தமக்கு ஏற்பட்ட இத்தகைய அனுபவத்தை மிக அழகாகவும் விளக்கமாகவும் கூறுகிறார். எதனிடத்து நமக்கு ஈடுபாடு அதிகமோ அதனைக் கவரவே கள்வர் புகுவர் என்பது பழமையான வசனம். அப்பொழுது ஈடுபாட்டின் காரணமாக வருவது யார் என்பதை அறியாமல் விட்டுவிடும் சூழ்நிலை ஏற்படுமன்றோ? ஆழ்வாருக்குக் கவிதையில் ஈடுபாடு உண்டாம், கலைஞருள் தலையாய கலைஞராய ஆழ்வாருக்குக் கலைகளுள் தலை சிறந்ததாய கவிதைக் கலையில் ஈடுபாடு ஏற்படுவதில் வியப்பொன்றும் இல்லையன்றோ. எனவே தம்மை மறந்து சிறந்த கவிதைகளில் ஈடுபட்டாராம். என்ன அதிசயம்? ஒரு நாள் மாயக் கவியாய் வந்து இறைவன் உள்புகுந்தானாம். புகுந்தவன் யாரென்று அறியாமலேயே ஆழ்வார் கவிதை இன்பத்தில் ஈடுபடலாயினார். அந்த இன்பத்தை இவர் அனுபவிக்கத்