பக்கம்:அறப்போர், அண்ணாதுரை.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சி. என். அண்ணாதுரை

65


பொது மதம் தேவை; மொழியல்ல!

ஹிந்தி இந்நாட்டின் பொது மொழியாம்! இதுதான் இவர்களுக்கு அடுத்த ஆதாரம். நாட்டில் ஒற்றுமையை உண்டாக்கப் பொதுமொழி ஒன்று இருந்தால் போதுமா? பல மொழிகள் இருப்பதாலா இந்நாட்டில் ஒற்றுமை இல்லாமல் இருக்கிறது? நாட்டில் சைவம், வைணவம், துவைதம், அத்வைதம், விசிஷ்டாத்வைதம், வேதாந்தம், சித்தாந்தம் எனப் பலப்பல மதங்கள் உள்ளனவே, அவை ஒன்றுக்கொன்று அன்றாடம் முட்டிக்கொள்ளுகின்றனவே, அதற்காக ஒரு பொது மதத்தை உண்டாக்க முன்வருவாரா அவினாசியார்?

இந்திய மதம் என்றோ, அல்லது திராவிட மதம் என்றோ ஒரு புது மதத்தைப் பொது மதமாக ஆட்சியாளர்கள் புகுத்துவதுதானே?

அப்படிப்பட்ட ஒரு பொது மதத்திற்கு நாங்களும் உடன் இருந்து பிரசாரம் செய்கிறோம். நாட்டில் தங்குதடையின்றி வளர்ந்துவரும் மதத்துவேஷத்தை ஒழிக்க வக்கில்லை, வந்துவிட்டார்களே, நமது மொழி எதிர்ப்பை நையாண்டி செய்ய. நையாண்டி செய்பவர்கள், விஷயங்களைத் திரித்துக் கூறுவார்கள்; பத்திரிகை மூலம், ரேடியோ மூலம் நம்மைப்பற்றிப் பொய்ப் பிரசாரம் செய்வார்கள். "நாங்கள் எங்கே கட்டாயம் என்று கூறினோம். 7 அல்லது 8 இந்திய மொழிகளில் ஒன்றைத்தானே மாணவர்கள் படிக்க வேண்டுமென்று கூறுகிறோம்" என்பார்கள். நீங்கள் இதைக்கண்டு ஏமாந்து போய்விடக்கூடாது; யோசித்துப் பார்க்கவேண்டும்.