பக்கம்:அறிஞர் அண்ணா நினைவஞ்சலி.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

153



சாக்ரடீஸ் போட்ட விலங்காக இருந்தாலும் சரி, ஏசுபிரான் பூட்டிய விலங்காக இருந்தாலும் சரி, உதய சூரியனே! நீ மாட்டிய விலங்காக இருந்தாலும் சரி, அது உரிமையின் வடிவமாக இருந்தால், உடைக்காமல் நான் பாதுகாப்பேன்.

மொழி ஆதிக்கத்தின் வடிவமாக அது புலப்பட்டால், சூரியனுக்குக் கீழே நான் பொடி பொடியாக்குவேன். என்னுடைய மொழி உணர்ச்சி கரைகின்ற கனவுகள் அல்ல.

உன்னை வெறுத்த இராக்கால மலர்கள்கூட, ஒளிந்திருந்து உனது அழகைப் பார்க்கின்றன.

இறந்துபோன தியாகிகளும், எல்லையற்ற பகைவர்களும் உன்னுடைய ஒளிக் கற்றையால்தான் உயிர் வாழ்கிறார்கள்.

உனது அற்புதமான முகவெட்டை - புகழ் ஒளியை பூட்டை உடைத்து வெளியே வருகின்ற அறிவு ஒளியை - சில நொண்டிக் குதிரைகள் பார்த்துக் கனைத்தன. சில கழுதைகள் பார்த்துக் கத்தின -

அவைகளை, நீ உன் பொன்னான கரங்களால் பொன்னோவியமாக மாற்றிவிட்டாய்.

அதாவது, எதிரிகளை எதிரிலியே உட்காரவைத்து நொடியிலே நண்பனாக்கி விட்டாய்!

தத்துவம், பூமியில் புறப்பட்டு வானத்தில் முடிவாகிறது. வானத்தில் முடிவான தத்துவம் வையத்தை நோக்கி மறுபடியும் வரும்போது, அது ஏறிவரும் தேர் நீதான்!

உன்னை எள்ளி நகையாடுகிறவர்களை; நீ அள்ளி எறிந்து விடுவதில்லை - மாறாகக் கிள்ளி சூட்டிக் கொள்கிறாய்.

உடம்பிலே வலுவில்லாதவன், நீ தருகின்ற வெப்பத்தை எண்ணித் திட்டுகிறான். மனதிலே சுத்தமில்லாதவன் பயப்படுகிறான்.

ஆனால், ஒளியும் - வலிவும் உன்னால் தான் வருகிறது என்பதைப் பிறகே உணருகிறேன்.